சூலூர் மின் கம்பத்தில் மோதிய கண்டெய்னர் லாரி: அதிர்ஷ்டவசமாக பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு-டிரைவரிடம் விசாரணை..!

கோவை : சூலூர் அருகே அப்பநாயக்கன்பட்டி பகுதியில் செலகரச்சல் செல்லும் சாலையோரத்தில் மின் கம்பம் உள்ளது. இந்த மின் கம்பத்தில் மும்பையில் இருந்து சரக்குகளை ஏற்றி வந்த கண்டெய்னர் லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து மோதியது.

இதில் மின்கம்பம் உடைந்து மின் கம்பிகளுடன் சாலையில் விழுந்தது. இதுகுறித்து மின்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அதிகாரிகள் மின்சாரத்தை துண்டித்தனர். இதனால் எந்த வித அசம்பாவிதமும் அங்கு ஏற்படவில்லை.
இதனையடுத்து செலக்கரைச்சல் மின்வாரிய அதிகாரிகள் விபத்து குறித்து சூலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த விபத்தினால் மின்வாரியத்திற்கு ரூ.40 ஆயிரம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக மின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் இந்த விபத்தினால் மின் கம்பத்தில் இருந்து தனியார் நிறுவனத்திற்கு சென்ற மின் கம்பியும் துண்டிக்கப்பட்டது. இதில் அந்த நிறுவனத்திற்கு ரூ.1 லட்சத்திற்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்டெய்னர் லாரியை ஓட்டி வந்த மும்பையை சேர்ந்த டிரைவர் முகமது யூசுப் கான் (30) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.