சூலூர் அருகே நொய்யல் ஆற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்த மெக்கானிக் – போலீசார் தீவிர விசாரணை..!

சூலூர் அருகே திருச்சி சாலையில் ராவத்தூர் பிரிவு அருகே இருசக்கர வாகன பழுது நீக்கும் கடையில் மெக்கானிக்காக வேலை பார்ப்பவர் மணிகண்டன் (வயது 30).

இவர் சம்பவத்தன்று காலை வழக்கம்போல வேலைக்கு சென்றார். அதன் பின்னர் திடீரென காணாமல் போனார்.இந்நிலையில் அன்று மாலை ராவத்தூர் நொய்யல் பாலம் வழியாக சென்ற பொதுமக்கள் ஆற்றில் ஒருவர் இறந்து கிடப்பதை பார்த்துள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் மற்றும் சூலூர் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் தீயணைப்பு படையினர் ஆற்றில் இறங்கி இறந்தவரின் உடலை மீட்டனர். அப்போது இறந்து கிடந்தது மணிகண்டன் என்பது தெரியவந்தது. இந்நிலையில் சிங்காநல்லூர் மற்றும் சூலூர் போலீசார் இடையே உடல் மீட்கப்பட்ட பகுதி யாருடைய எல்லை என பிரச்சினை எழுந்தது.

அப்போது அந்தப் பகுதி சிங்காநல்லூர் போலீசாரின் எல்லைக்கு உட்பட்டது என தெரியவந்தது. இதையடுத்து சிங்காநல்லூர் போலீசார் மணிகண்டனின் உடலை இ.எஸ்.ஐ ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் எவ்வாறு இறந்தார்? தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.