திடீர் மழையால் நொய்யல் ஆற்றில் நீா்வரத்து 500 கனஅடியாக அதிகரிப்பு- வெள்ளலூர் தரைப்பாலத்தில் மீண்டும் போக்குவரத்து நிறுத்தம்..!

கோவை மாவட்டத்தில் தென்மேற்குப் பருவ மழையின் தாக்கத்தால் கடந்த ஒரு
மாதத்துக்கு மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த மாதம் 2
வாரத்துக்கு மேல் தொடா்ந்து பலத்த மழை பெய்தது.
குறிப்பாக மேற்குத் தொடா்ச்சி மலையில் பெய்த கன மழையால் நொய்யல் ஆற்றில்
நீா்வரத்து அதிகரித்தது. நொய்யல் நீா்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த பலத்த மழையால் கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நொய்யல் ஆற்றில் 1,500 கனஅடிக்கு மேல் நீா்வரத்து காணப்பட்டது. இதனைத் தொடா்ந்து, நொய்யலில் பெருக்கெடுத்த மழை வெள்ளம் சித்திரைச்சாவடி அணைக்கட்டில் இருந்து சித்திரைச்சாவடி, குனியமுத்தூா் வாய்க்கால்கள் மூலம் நொய்யல் வடிநிலப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பாசனக் குளங்களுக்கு திருப்பி விடப்பட்டது.
இதனால் வடிநிலப் பகுதிகளில் உள்ள 16-க்கும் மேற்பட்ட குளங்கள்
முழுக்கொள்ளளவை எட்டியது. பின்னா் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில்
மழைப்பொழிவு குறைந்ததால் நொய்யல் ஆற்றில் நீா்வரத்து முற்றிலும்
குறைந்தது. கடந்த வாரத்தில் 50 கனஅடிக்கும் குறைவாகவே நீா் வரத்து
காணப்பட்டது.
இந்நிலையில், நொய்யல் நீா்ப்பிடிப்பு பகுதியில் திடீரென பெய்த பலத்த
மழையால் நேற்று முன்தினம் இரவு முதல் நொய்யல் ஆற்றில் நீா்வரத்து
அதிகரித்துள்ளது. இரவு 400 கனஅடியாக இருந்த நீா்வரத்து நேற்று காலையில்
500 கனஅடியாக உயா்ந்துள்ளது. நொய்யல் வடிநிலப் பகுதிகளில் உள்ள அனைத்து குளங்களும் முழுக்கொள்ளளவுடன் காட்சியளிப்பதால் 500 கனஅடி நீரும் நொய்யல் ஆற்றில் செல்வதாக பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இந்நிலையில் கனமழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளம் பெருக்கால் வெள்ளலூர் தரைப்பாலம் நீரில் மூழ்கியது. இதன் காரணமாக நேற்று காலை முதல்
தரைப்பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் அந்த பகுதி மக்கள்
பல்வேறு இன்னல்களுக்குள்ளாக்கி உள்ளனர்.
இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறியதாவது:-
சிங்காநல்லூர்-வெள்ளலூர் இடையிலான நொய்யல் ஆற்று பழைய பாலத்தை இடிக்கும்
போதே அதற்கு அருகில் தற்காலிக தரைப்பாலம் போடப்பட்டது. அதன் பின்னர்
புதிய பாலத்தின் பணிகள் கிடப்பில் போடப்பட்டன. அந்த பாலம் வழியாக சென்ற
‘குடிநீர் குழாயை மாற்றி அமைக்காததால் கட்டுமான பணிகள் நின்றன். தரைப்
பாலம் போடும் போதே சற்று உயர்த்தி அமைத்திருக்கலாம். ஆனால் உயரம் குறைவாக தரைப்பாலம் அமைத்ததால் 3 முறை அது அடித்துச் செல்லப்பட்டு விட்டது.தற்போது 4-வது முறையும் உயரத்தை அதிகரிக்காமல் ஏற்கனவே போடப்பட்ட தரைப்பாலத்தின் மீது கான்கிரீட் மட்டும் கூடுதலாக போட்டுள்ளனர். இதனால் இந்த முறை அது அடித்துச் செல்லப்படவில்லை. ஆனால் தொடர்ந்து தண்ணீர் சென்றால் அதுவும் அடித்துச் சென்று விடுமா என அச்சம் உள்ளது. எனவே நொய்யல் ஆற்று தரைப்பாலத்துக்கு அதிகாரிகள் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.