தெருநாய் தொல்லை இனி இல்லை… கோவை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை.!!

கோவையில் ”லொல்.. லொல்..” தொல்லைக்கு கோவை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

கோவை உக்கடம் புல்லுக்காடு பகுதியில் புனரமைக்கப்பட்ட நாய்கள் கருத்தடை மையத்தை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தக்குமார் குத்துவிளக்கு ஏற்றி வைத்து திறந்து வைத்தார்.

கோவை மாநகருக்கு உட்பட்ட பகுதிகளில் தெரு நாய்கள் அதிகரித்து காணப்படுகின்றன. இந்த தெருநாய்கள் வீதிகளில் விளையாடும் குழந்தைகளை அவ்வப்போது கடித்து விடுகின்றன.

மேலும், இருசக்கர வாகனங்களில் செல்வோரை துரத்துகின்றன. இதனால் பதட்டமடையும் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயமடையும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

இதனிடையே நாய்கள் கருத்தடை மையத்தை மீண்டும் செயல்படவைக்க பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். தொடர்ந்து கோவை மாநகர் முழுவதும் உள்ள தெருநாய்களை கணக்கெடுக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.

இதனிடையே உக்கடம் புல்லுக்காடு பகுதியில் புனரமைக்கப்பட்ட நாய்கள் கருத்தடை மையத்தை மாநகராட்சி மேயர் கல்பனா இன்று குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

கோவை மாநகராட்சியில் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் சீரநாய்க்கன்பாளையம், ஒண்டிப்புதூர் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் நாய்கள் கருத்தடை மையங்கள் மூலம் கடந்த மார்ச் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை சுமார் 2300 ஆதரவற்ற நாய்களை பிடித்து சட்டப்படி கருத்தடை செய்துள்ளனர்.

இவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் வரை ரூ.445 ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வந்தது. செப்டம்பர் மாதம் முதல் ரூ.700 ஆக ஊக்கத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது.

தற்போது, சாலை மற்றும் தெருக்களில் போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் கால்நடைகளை பிடிப்பதற்கும் வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த வாகனம் ஆதரவற்ற கால்நடைகளை பிடித்து பாதுகாப்பாக கொண்டு செல்ல பயன்படுத்தப்படும். இந்நிகழ்ச்சியில் துணை மேயர் வெற்றிச்செல்வன், துணை கமிஷனர் ஷர்மிளா, சுகாதார குழுத்தலைவர் மாரிச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.