நத்தத்தில் தாய் கண் முன்னே மகன் குத்திக் கொலை- கோழியை நாய் கடித்துக் கொன்றதால் நடந்த கொடுமை..

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் விஜயன் இவரது மகன்  விஷ்ணு(24) இவர் ஒரு நாய் ஒன்றை வளர்த்துள்ளார். விஷ்ணு  வளர்த்து வந்த நாய்  சில தினங்களுக்கு முன்பு வீட்டு அருகே உள்ள கசாப்புக் கடையில் வேலை பார்க்கும் முத்து(37) என்பவரது வீட்டில்  வளர்த்து வந்த கோழியைக் கடித்துக் கொன்றதாக  கூறப்படுகிறது. இது தொடர்பாக முத்து விஷ்ணு வளர்த்து வரும் நாயே கொன்று விடுவதாக மிரட்டி உள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே முன்பகை ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில் இன்று காலை விஷ்ணு வீட்டுக்கு சென்ற முத்து.விஷ்ணு தாய் லெட்சுமிடம்  வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் தன் கோழியை கொன்றதற்காக ரூபாய் ஆயிரம் பணம் தரவேண்டும் என கூறிவிட்டு சென்றுள்ளார்.  அதன்பின் வீட்டிற்கு வந்த விஷ்ணுவிடம் அவரது தாயார் முத்து வந்து சென்ற தகவலை கூறியுள்ளார். விஷ்ணு மற்றும் லட்சுமி இருவரும்  முத்து வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு விஷ்ணுவுக்கும், முத்துக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த முத்து தன் வீட்டில் மாடு உரிக்க வைத்திருந்த கத்தியை எடுத்து விஷ்ணுவின் வயிற்றில் குத்தினார். இதனால் படுகாயம் அடைந்த விஷ்ணு ரத்த வெள்ளத்தில் சரிந்துள்ளார். மகன் விஷ்ணு தனது கண்முன்னே ரத்த வெள்ளத்தில் துடி துடிப்பதை பார்த்த அவரது தாய் கதறி துடித்துள்ளார். இதையடுத்து விஷ்ணுவை சிகிச்சைக்காக நத்தம் அரசு மருத்துவமனை கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட விஷ்ணு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முத்துவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாயின் கண் முன்னே மகன் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நத்தம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.