விதிமீறலால் நடந்த பட்டாசு ஆலை விபத்து… 24 பேர் பலியான சோகம்..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் நிகழ்ந்த பயங்கர வெடி விபத்தில் 24 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். இந்தக் கோர விபத்து நேர்ந்தது எப்படி..?

விருதுநகர் அருகே உள்ள கட்டனார்பட்டியில் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஈஸ்வரி என்பவருக்கு சொந்தமான வனஜா பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்தப் பட்டாசு ஆலையில் தொழிலாளர்கள் நேற்று வழக்கம்போல் பட்டாசு தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மூலப்பொருட்கள் உராய்வின் காரணமாக திடீரென பயங்கர வெடி விபத்து நேர்ந்தது. பல கிலோ மீட்டர் தூரத்திற்கு கடும் அதிர்வு உணரப்பட்டதோடு, விண்ணை முட்டும் அளவிற்கு புகை கிளம்பியதால் சுற்றுவட்டார கிராம மக்கள் பீதியடைந்தனர். இந்த வெடி விபத்தில் நான்கு அறைகள் தரைமட்டமான நிலையில், சில அறைகள் சேதமடைந்தன. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், தீயைக் கட்டுப்படுத்தி இடிபாடுகளில் சிக்கியிருந்த உடல்களை மீட்டனர். மேலும், சிலரை படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதித்தனர்.இந்தக் கோர விபத்தில் 24 பேர் உயிரிழந்த நிலையில், 16 பெண்கள் உட்பட 19 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மேலும், 11 பேர் படுகாயங்களுடன் சிகிச்சையில் உள்ளனர். சேர்வைக்காரன்பட்டி என்கிற ஒரே ஊரைச் சேர்ந்த 16 பேர் உயிரிழந்தது கூடுதல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்துக்குப் பின்னரும் பட்டாசுகள் இடைவிடாமல் வெடித்துக் கொண்டிருந்ததால் மீட்பு பணியில் சிரமம் இருந்தது. மீட்பு பணியின்போது பட்டாசு வெடித்ததில் தீயணைப்பு வீரர்கள், காவல் துறையினர் என 12 பேர் காயம் அடைந்தனர்.

இந்நிலையில், விபத்து நேர்ந்த இடத்தை அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் நேரில் பார்வையிட்டு மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தினர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா, மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாதா, மதுரை சரக டி.ஐ.ஜி அபிநவ் குமார் ஆகியோர் விபத்து நடந்த இடத்தை நேரில் ஆய்வு செய்தனர். காகிதக் குழாய்கள், அட்டைகளைச் சேமித்து வைக்கும் குடோனில், 35-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை ஒரே அறையில் அமர வைத்துப் பாதுகாப்பற்ற சூழலில் பணி செய்ய வைத்ததால் உயிரிழப்பு அதிகரித்ததாகக் கூறப்படுகிறது. அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமான ரசாயன மூலப்பொருட்களைப் பயன்படுத்தி உச்சநீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட சரவெடி பட்டாசு தயாரித்ததும் அம்பலமாகியுள்ளது.

ஏற்கெனவே, கடந்த ஆண்டு விதிமீறல் காரணமாக இந்த ஆலையின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பட்டாசு ஆலை விபத்து தொடர்பான விசாரணைக்கு நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தலைமறைவாக உள்ள ஆலையின் உரிமையாளரை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். தேவையான அனைத்து உதவிகளையும் ஒருங்கிணைக்க மாவட்ட ஆட்சியருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.