பெண் பிரதிநிதிதிகளுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி தொடங்கியது- மேயர்கள், துணை மேயர்கள் பங்கேற்பு..!

கோவை: தமிழகத்தில் உள்ள பெண் மேயர்கள், துணை மேயர்கள், உள்ளாட்சி பெண் பிரதிநிதிதிகளுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி கோவையில் இன்று காலை தொடங்கியது. இந்த பயிற்சியில் கோவை திண்டுக்கல், வேலூர், மதுரை, ஈரோடு, தாம்பரம், காஞ்சிபுரம், கரூர், கடலூர், சிவகாசி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பெண் மேயர்கள், நாகர்கோவில், தஞ்சாவூர், தூத்துக்குடி, திருச்சி, சேலம், சிவகாசியை சேர்ந்த துணை மேயர்கள் மற்றும் திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, பொள்ளாச்சி, நீலகிரி, ராஜபாளையம், மறைமலைநகர், விழுப்புரம், திண்டிவனம் ஆத்தூர், மேட்டூர், திருச்செங்கோடு, பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை , தஞ்சாவூர் , தேனி அல்லிநகரம் நாகை மாவட்டங்களை சேர்ந்த உள்ளாட்சி துறை பெண் தலைவர்கள் மற்றும் திருவாதிபுரம், கிருஷ்ணகிரி தர்மபுரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த உள்ளாட்சி துறை பெண் துணைத் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த திறன் மேம்பாட்டு பயிற்சியில் மகளிர் ஆணையத் தலைவி ஏ. எஸ் குமாரி தலைமை வகித்தார். கோவை மாவட்ட கலெக்டர் சமீரன், மேயர் கல்பனா, மாநகராட்சி கமிஷனர் பிரதாப், நகரியல் பயிற்சி மைய இயக்குனர் சரஸ்வதி, இணை பேராசிரியர் தமிழ்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டன். இந்த திறன் மேம்பாட்டு பயிற்சியில் பாலினம், தலைமைப் பண்பு, உள்ளூர் நிர்வாகம், தகவல் தொடர்பு உட்பட 12 தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி 5 அணிகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவுக்கும் 3 நாட்கள் நடக்கிறது. இந்த பயிற்சி வகுப்பில் மகளிர் ஆணையத் தலைவி குமாரி கூறும்போது, மகளிர் ஆணையம் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை. பெண்களுக்கான சட்டங்கள் உரிமைகள் ஆகியவற்றை பாதுகாப்பது தான் முதன்மையான பணி சிலவற்றை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காணப்படும். குடும்ப வன்முறையால் பெண்கள் சிக்கி தவிக்கின்றனர். பெண்கள் பிரச்சினைகள் குறித்து கிராமப்புறங்களில் இருந்து தான் அதிக அளவில் மகளிர் ஆணையத்திற்கு மனுக்கள் வருகின்றன. தமிழகத்தில் 11 மாநகராட்சிகளை பெண்களுக்கு ஒதுக்கி உள்ளனர். தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ வேண்டும் என்பதே முதல்வரின் விருப்பமாக உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் போலீசாரும், அரசு அதிகாரிகளும் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். பெண்கள் அனைத்து பொறுப்புகளிலும் திறம்பட செயல்பட்டு வருகின்றனர். நம்மை கேலி செய்பவர்களை பெருமையாக கடந்து செல்ல வேண்டும் . அவர்கள் தலைமை பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.
கலெக்டர் சமீரன் கூறும்போது, நீங்கள் பதவி ஏற்று 8 மாதங்கள் தான் கடந்துள்ளது. உங்களுக்கு பல தடைகள் வரும். அவற்றை தகர்த்துக் கொண்டு, ஆளுமையை வளர்த்து முன்னேற்ற பாதையில் செல்ல வேண்டும் என்றார்.