12 அடியாக சரிந்த சிறுவாணி அணையின் நீர்மட்டம்: குறைக்கப்பட்ட குடிநீர் எடுக்கும் அளவு 

12 அடியாக சரிந்த சிறுவாணி அணையின் நீர்மட்டம்: குறைக்கப்பட்ட குடிநீர் எடுக்கும் அளவு 

 

கோவை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் சிறுவாணி அணை முக்கிய பங்கு வைக்கிறது. இந்த அணையானது கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் அடர்ந்த வனப் பகுதியில் நடுவே அமைந்து உள்ளது. அணையின் நீர் பிடிப்பு பகுதியில் தமிழக எல்லையில் இருந்தாலும் அணையானது கேரளா மாநிலம் எல்லைக்குள் உள்ளது. இதனால் 50 அடி உயரம் கொண்ட இந்த அணையில் 45 அடி உயரத்திற்கு மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்க கேரளா அரசு அதிகாரிகள் அனுமதிக்கின்றனர். தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை மூலம் இந்த அணைக்கு தண்ணீர் கிடைக்கிறது. இந்த அணையில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் மாநகராட்சியில் 30 வார்டு பகுதிகளுக்கும் பொதுமக்களுக்கும் வழியோரங்களில் உள்ள 22 கிராமங்களுக்கும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கோவையில் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. சுட்டு எரிக்கும் வெயிலால் கோவையில் உள்ள குளங்கள் குட்டைகள் உள்ளிட்ட நீர்நிலைகள் தண்ணீர் இன்றி வறண்டு வருகிறது. சிறுவாணி அணை நீர் பிடிப்பு பகுதியில் நிலவும் வெயில் மற்றும் அணையில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் காரணமாக அணையின் நீர்மட்டம் 12 அடியாக சரிந்து உள்ளது. இதை அடுத்து அணையில் இருந்து குடிநீருக்காக நாளொன்றுக்கு 37 எம்.எல்.டி தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி ஒருவர் கூறும்போது:-

கோவை மாநகராட்சியின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் பில்லூர், சிறுவாணி இரண்டு அணைகளும் முக்கிய பங்கு வைக்கிறது. இதில் பில்லூர் அணை தண்ணீரை ஆதாரமாகக் கொண்டு பில்லூர் 1, பில்லூர் 2, பில்லூர் 3 ஆகிய மூன்று குடிநீர் திட்டங்களும் சிறுவாணி அணை தண்ணீரை ஆதாரமாகக் கொண்டு குடிநீர் திட்டமும் .செயல்படுத்தப்படுகிறது. இதில் சிறுவாணி அணையின் முழு கொள்ளளவை எட்டினால் அணையில் இருந்து நாளொன்றுக்கு 106 எம்.எல்.டி வரை தண்ணீர் எடுக்க முடியும் ஆனால் கடந்த ஆண்டு போதிய அளவு பருவமழை பெய்யாததால் சிறுவாணி அணை முழு கொள்ளளவை எட்டவில்லை. இதனால் இதன் காரணமாக தற்பொழுது குடிநீருக்காக தண்ணீர் எடுக்கப்படுவதால் சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிந்து விட்டது. இதை அடுத்து அணையில் இருந்து எடுக்கப்படும் குடிநீர் அளவு 37 எம்.எல்.டி யாக குறைக்கப்பட்டு உள்ளது. இதில் 34 எம் எல்.டி தண்ணீர் மாநகராட்சிக்கும் மீதமுள்ள நான்கு எம்.எல்.டி வழியோரங்களில் உள்ள கிராமங்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. தற்பொழுது உள்ள தண்ணீரை கொண்டு மே மாதம் வரை குடிநீர் விநியோகம் செய்ய முடியும். வழக்கமாக மே இறுதி வாரத்தில் தென்மேற்கு பருவ மழை பெய்ய தொடங்கும் அவ்வாறு பருவ மழை பெய்தால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை என்று கூறினார்.