நீலகிரியில் கடும் உறைபனி…கருகிய தேயிலை செடிகள் – விவசாயிகள் வேதனை..!

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கடந்த ஒரு வாரமாக உறைபனியின் தாக்கம் அதிகரித்துள்ளது. இன்று காலை ஊட்டியில் குறைந்தபட்ச வெப்பநிலை 1.7 ஆக பதிவாகி இருந்தது. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளான அப்பர் பவானி, அவலாஞ்சியில் வெள்ளை கம்பளம் விரித்தாற்போல் உறைபனி படர்ந்து காணப்பட்டது. அவலாஞ்சியில் நேற்றுமுன்தினம் குறைந்தபட்ச வெப்பநிலை ஜீரோ டிகிரி செல்சியசாக இருந்தது. நேற்று மைனஸ் ஒரு டிகிரி செல்சியசாக பதிவானது. கடுங்குளிர் நிலவுவதால் தேயிலை தோட்ட வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
உறைபனி தாக்கம் தொடர்வதால் இத்தலார், காந்தி கண்டி, அவலாஞ்சி, எமரால்டு பகுதிகளில் தேயிலை செடிகள் கருகி வருகின்றன. தொழிற்சாலைகளுக்கு தேயிலை கொள்முதல் அடியோடு குறைந்துள்ளது. இதுகுறித்து சிறு தேயிலை விவசாயிகள் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:- இந்த ஆண்டு பனிக்காலம் தாமதமாக தொடங்கியுள்ள நிலையில் உறைபனியின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. பகலில் வெயில் அடித்தாலும், இரவில் உறைபனி இருப்பதால் பயிர்கள் கருகி விடுகிறது. தேயிலை கொழுந்துகள் கருகி உள்ளதால், அதில் இருந்து பச்சை தேயிலை பறிக்க முடியாமல் சிரமப்பட்டு வருகிறோம். இனி மழை பெய்து பசுமை திரும்பி செடிகளில் கொழுந்து விட்டால் மட்டுமே பச்சை தேயிலையை பறிக்க முடியும். இதற்கு 4 மாதங்கள் வரை ஆகும். அதுவரை என்ன செய்வது என்பது தெரியவில்லை. எனவே பனியால் கருகிய பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். அறுவடைக்கு தயாரான தேயிலை, எடுக்க முடியாத அளவுக்கு கருகியதால் விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளனர். நாள்தோறும் 5 ஆயிரம் கிலோ கொள்முதல் செய்யும் தொழிற்சாலைகளுக்கு 2 ஆயிரம் கிலோ வரை மட்டுமே பசுந்தேயிலை வழங்க முடிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.