கருத்து வேறுபாட்டால் பிரிந்த கல்லூரி மாணவியை அழைத்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்த காதலன் கைது..!

கோவை: அன்னூர் அவினாசி ரோட்டை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி. இவர் காரமடையில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

கடந்த 2 வருடங்களுக்கு முன்பு மாணவிக்கு கோவை சத்தி ரோட்டை சேர்ந்த
மட்டன் கடையில் வேலை பார்க்கும் மகேந்திரன் (வயது 18) என்பவருடன் பழக்கம்
ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில்
சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்தனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 2 பேரும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து மாணவி மகேந்திரனுடன் பேசுவதையும், பழகுவதையும் தவிர்த்தார்.

சம்பவத்தன்று மாணவியை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட அவர் உன்னிடம் பேச வேண்டும் குட்டையூரில் உள்ள மதீஸ்வரன் மலைக்கு வருமாறு அழைத்தார். அதன்
படி மாணவி மகேந்திரன் அழைத்த இடத்துக்கு சென்றார். அப்போது அவர்களுக்கு
இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அவர் மாணவியை தாக்கி
கொலை மிரட்டல் விடுத்து அங்கு இருந்து தப்பிச் சென்றார். இது குறித்து
மாணவி தனது தாயிடம் தெரிவித்தார்.

அவர் இது குறித்து அன்னூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில்
போலீசார் வழக்குப்பதிவு செய்து பழகுவதை நிறுத்திய காதலியை தாக்கிய
மகேந்திரனை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில்
அடைத்தனர்.