குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை மீட்ட தூய்மை பணியாளர்கள்..!

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள சாணம் பாளையம், கட்டபொம்மன் நகரில் நேற்று அதிகாலையில் தூய்மை பணியாளர்கள் துய்மை பணிகளில் ஈடுபட்டிருந்தனர் .அப்போது சாலை ஓரத்தில் குப்பை தொட்டிக்கு அருகில் கட்டைப்பை ஒன்று கிடந்தது. அதில் இருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டது. இதனால் சந்தேகம் அடைந்த தூய்மை பணியாளர்கள் கட்டை பையை திறந்து பார்த்தனர்.அதில் பிறந்து சில நாட்களே ஆன  பச்சிளம் பெண் குழந்தை ஒன்று தொப்புள் கொடி அகற்றாத நிலையில் இருந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தது துய்மை பணியாளர்கள் அந்த பச்சிளம் குழந்தையை மீட்டு அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த அன்னூர் போலீசார் ஆம்புலன்ஸ் மூலம் அன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அந்த குழந்தை அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இது குறித்து அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் அன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 2 நாட்களுக்கு முன் பிறந்த குழந்தைகளின் பட்டியலை சேகரித்து வருகிறார்கள்.