வீடியோ விவகாரம்: எடிட் செய்ததாக அமைச்சர் எ.வ.வேலு நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார்- அண்ணாமலை சவால்..!

கோவை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஒன்றில் அமைச்சர் கே.என்.நேரு பேசும் வீடியோ ஒன்றை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “திமுக என்பது பணத்தை மட்டுமே நம்பி தேர்தலை சந்திக்கும் ஒரு கட்சி. பணத்தை வைத்து எதையும் வாங்கி விடலாம் என்று நம்பும் ஒரு கட்சி. சந்தேகம் இருப்பின், இந்த காணொளியை பார்க்கவும்” என்று குறிப்பிட்டுள்ளார். அந்த வீடியோவில் அமைச்சர் கே.என்.நேருவும், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனும் பேசிக்கொள்வது போல் இருக்கிறது. ஒருபுறம் அமைச்சர் எ.வ.வேலு மைக்கில் ஏதோ பேசிக்கொண்டிருக்க, பின்னணியில் நேருவின் குரல் மெதுவாக கேட்கிறது. தொகுதியில் பணப்பட்டுவாடா பற்றி பேசுவதுபோல் அந்த வீடியோவில் இருப்பதால் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது. பாஜக, திமுக தொண்டர்கள் சமூக வலைதளங்களில் கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
அண்ணாமலையின் இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ள அமைச்சர் எ.வ.வேலு, சில விஷமிகளால் வீடியோ திரித்து எடிட் செய்யப்பட்டுள்ளதாக கூறி உள்ளார் இந்நிலையில் கோவையில் பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மூன்று நாட்களுக்கு முன்பு ஒரு அமைச்சர், சேர் வருவதற்கு தாமதம் ஆனதால் தொண்டர்கள் மீது கல் எடுத்து எறிகிறார். அவர் இன்னும் பதவியில் இருக்கிறார். இரண்டு நாள் கழித்து மற்றொரு அமைச்சர் மேடையில் தொண்டரை அடிக்கிறார். இதை தமிழ்நாடே பார்த்தது. அதன்பிறகு தமிழக பாஜக நேற்று 2 வீடியோக்களை வெளியிட்டது.
அதில், ஒரு வீடியோ அண்ணன் டி.ஆர்.பாலு சேதுசமுத்திர திட்டம் தொடர்பான திமுக விளக்கக் கூட்டத்தில் பேசும்போது எடுக்கப்பட்டது. அந்த வீடியோயை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தேன். இது தொடர்பாக இளங்கோவன் சில கருத்துக்களை கூறியிருக்கிறார். அவர் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். அந்த வீடியோ கட் செய்து எடிட் செய்யப்படாத வீடியோ, இடையில் எதுவும் எடிட் செய்யப்படவில்லை.