சுனாமியால் குடும்பத்தை இழந்த வளர்ப்பு மகளுக்கு திருமணம்-நெகிழ்ச்சியில் ராதாகிருஷ்ணன்..!

தமிழகத்தில் 2004ல் சுனாமி பேரலை வந்தது. இதில் நாகப்பட்டினம் மாவட்டம் மிக அதிகமாக பாதிக்கப்பட்டது.

இதில் சுமார் 7000 பேர் வரை பரிதாபமாக உயிரிழந்தனர். பெற்றோர்கள் பலர் தமது குழந்தைகளை இழந்தனர். 99 குழந்தைகளும் பெற்றோரை இழந்தன. இந்த குழந்தைகளை பலர் தத்தெடுத்து கொண்டனர்.

அப்படி சுனாமி பேரலையில் பெற்றோரை இழந்த 9 மாத மற்றும் 3 மாத குழந்தைகள் சௌமியா , மீனா இருவரையும் அப்போதைய நாகை மாவட்ட கலெக்டர் , தற்போதைய தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தம் தனிப்பட்ட ஆதரவில் வளர்த்து வந்தார்.

பணி மாறுதல் இருந்தாலும் அவ்வப்போது ராதாகிருஷ்ணன் அந்த குழந்தைகளை நேரில் சென்று பார்வையிட்டு வந்தார். அத்துடன் நில்லாமல் அவர்களின் கல்வி, திறமைகளை ஊக்குவித்து பராமரித்து வந்தார். இவர்களுக்கு 18 வயதானதும் இவர்கள் இருவரையும் நாகப்பட்டினத்தில் வசிக்கும் மலர்விழி மற்றும் மணிவண்ணன் தம்பதியினர் தத்தெடுத்துக் கொண்டனர்.

இதில் சௌமியாவுக்கு தற்போது திருமணம் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்டு ராதாகிருஷ்ணன் தமது நினைவுகளை பகிர்ந்து கொண்டு மணமக்களுக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். அவரது செயல்பாடுகள் அப்பகுதி மக்கள் பெரும் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.