ஒரு பேரூராட்சியை இழந்து விட்ட தி.மு.க:போட்டியின்றி 11 வேட்பாளர்கள் வெற்றி.!!

கமுதி பேரூராட்சியில் உள்ள 11 வார்டுகளில் போட்டி இன்றி வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த பேரூராட்சியின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளும் கிட்டத்தட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பேரூராட்சியில் மொத்தம் 15 வகைகள் உள்ளன. இந்த 15 வார்டுகளில் 46 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். அதில், சிலர் கடந்த இரு தினங்களாக தங்களது வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டு வந்தனர்.

இன்று வேட்புமனு திரும்பப் பெறுவதற்கான நேரம் முடிந்த நிலையில், மொத்தமுள்ள 15 வார்டுகளில் 10 வார்டுகளில் சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒரு வார்டில் பாஜக வேட்பாளர் சத்யா ஜோதி ராஜா போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆக, மொத்தம் 15 வார்டுகளில் 11 வார்டுகளில் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளதால், மீதமுள்ள 4 வார்டுகளில் மட்டுமே தேர்தல் நடக்க உள்ளது.

மேலும், இந்த பேரூராட்சியில் மீதமுள்ள 4 வார்டுகளில் ஒரு வார்டில் அதிமுகவும், மீதி உள்ள 3 வார்டுகளில் சுயேச்சை வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். திமுக எந்த வார்டுகளிலும் போட்டியிடாமல் உள்ளது.

இதற்கிடையே, இந்த பேரூராட்சி தலைவராக அப்துல் வகாப் என்பவரும், துணைத்தலைவராக அந்தோணி சவேரியார் என்பவரும் தேர்ந்தெடுக்கப் பட வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.