கோவையில் ஊழல் புகாரில் பெண் நீதிபதி’சஸ்பெண்ட்’..!

கோவை : கோவையில் பணியாற்றிய பெண் நீதிபதி, ஊழல் புகாரில் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார்.கோவையில், நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவராக பணியாற்றி வந்தவர் உமாராணி. 2016 – 2018 வரை, கோவை இரண்டாவது கூடுதல் சார்பு நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றினார்.அப்போது, பல்வேறு வழக்கில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை திருத்தம் செய்து, லஞ்சம் பெற்று, ஒரு தரப்புக்கு சாதகமாக தீர்ப்பு அளித்ததாக, சென்னை உயர் நீதிமன்ற விஜிலென்ஸ் கமிட்டிக்கு புகார் சென்றது. விசாரணையில், நீதிபதி உமாராணி ஊழல் முறைகேடில் ஈடுபட்டது உறுதியானது. ஆனால், அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போடப்பட்டது.இது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் என்பவர் ‘ரிட்’ மனு தாக்கல் செய்தார். விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி உமாராணி மீது நடவடிக்கை எடுக்கவும், புலன் விசாரணை அறிக்கையை விஜிலென்ஸ் கமிட்டி தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார். இதன் அடிப்படையில், நீதிபதி உமாராணி ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டுள்ளார்.