டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி காலி மது பாட்டில்களுடன் கோவை கலெக்டர் அலுவலகத்தில் பொது மக்கள் மனு..!

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியை அடுத்த செல்வபுரம் காலனி பொதுமக்கள் காலி மதுபாட்டில்களுடன் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
சோமனூரை அடுத்த செல்வபுரம் காலனி பகுதியில் ஏற்கனவே ஒரு டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்தது. இதனால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வந்தது. இதனிடையே மக்கள் அனைவரும் போராட்டம் நடத்தி அந்த டாஸ்மாக் கடையை அகற்றினோம். இதனிடையே மீண்டும் டாஸ்மாக் கடை அமைக்க பணிகள் நடைபெறுகிறது.
டாஸ்மாக் கடை அமைக்க முயற்சி செய்யும் பகுதியில் பள்ளிகள், தேவாலயம், மசூதி, நியாயவிலைக்கடை மற்றும் குடியிருப்புகள் அமைந்துள்ளன. இந்த பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்தால் அந்த வழியாக செல்லும் பள்ளி குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் பாதிப்பு ஏற்படும். எனவே இப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கும் முயற்சியை கைவிட வேண்டும். இங்கு டாஸ்மாக் கடை அமைத்தால் மக்களை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.