கோவையில் ஆதரவற்ற அன்பு இல்ல மாணவ, மாணவிகளுக்கான பொங்கல் விளையாட்டு போட்டி..!

கோவை புதூரில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை 4 -ம் அணி சார்பில் கோவையில் உள்ள ஆதரவற்ற அன்பு இல்ல மாணவ- மாணவிகளுக்கான பொங்கல் விளையாட்டுப் போட்டிகள் நேற்று நடந்தது. இந்த விளையாட்டுப் போட்டியினை 4-வது அணி கமாண்டன்ட் செந்தில்குமார் தொடக்கி வைத்தார். விளையாட்டு போட்டிகள் காலை தொடங்கி மாலை வரை நடந்தது. விளையாட்டு போட்டிகளில் அன்பு இல்ல குழந்தைகள் 368 பேர் கலந்து கொண்டனர்.மாணவ மாணவிகளுக்கு லெமன் ஸ்பூன், ஓட்டப்பந்தயம், பந்து எறிதல், குண்டு எறிதல், சாக்குப்போட்டி, நீளம் தாண்டுதல், லக்கி கார்னர், கயிறு இழுத்தல் உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இது குறித்து சிறப்பு காவல்படை போலீஸ் துணை சூப்பிரண்டு அய்யர்சாமி கூறியதாவது:-
இந்த பொங்கல் விளையாட்டு போட்டி கோவையில் 9-வது வருடமாக நடத்தப்படுகிறது. இந்த போட்டி நடத்துவதற்கான நோக்கம் ஆதரவற்ற அன்பு இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையும், உற்சாகமும், மகிழ்ச்சியையும் உருவாக்கும் வகையிலும் ஆண்டுதோறும் நடத்தபடுகிறது. இவ்வாறு அவர் கூறினார் .இந்த போட்டியில் மாணவ- மாணவிகள் உற்சாகமாக கலந்து கொண்டு தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தினார். விளையாட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை டி.எஸ்.பி.க்கள் அய்யர்சாமி,ரவிச்சந்திரன், குமார் ஆகியோர் செய்து இருந்தனர். இந்த போட்டிக்கான ஏற்பாட்டினை தமிழ்நாடு சிறப்பு காவல் படை 4-வது பட்டாலியன் உடன் இணைந்து ஏ.ஆர்.சி செய்து இருந்தனர். வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு மாலை பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.