காவிரியில் தண்ணீர் திறக்க எதிர்ப்பு… தமிழக கர்நாடக எல்லையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கர்நாடக விவசாயிகள் கைது..!

சத்தியமங்கலம்:: கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகளில் இருந்து காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடகா விவசாயிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் படி தண்ணீர் திறக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதால் கர்நாடகாவில் போராட்டங்கள் வலுத்து வருகிறது. இதற்கிடையே  சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் கர்நாடக மாநில எல்லையில் உள்ள புளிஞ்சூர் சோதனைச் சாவடி பகுதியில் கர்நாடகா மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டத்தைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் காவிரியில் தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற சாம்ராஜ்நகர் மாவட்ட போலீசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை கைது செய்தனர். இதன் காரணமாக சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.