நாளை தமிழகம் வரும் பிரதமர் மோடி.. போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்த திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழகம்..!

திண்டுக்கல் காந்திகிராமிய நிகர் நிலை பல்கலைக்கழகத்தின் 36 ஆவது பட்டமளிப்பு விழாவிற்கு பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு நேற்று முதல் திண்டுக்கல் காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் சென்றது. காந்திகிராமிய பல்கலைக்கழகம் முழுவதும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு மற்றும் மோப்ப நாய்கள் சோதனை என முன் ஏற்பாடு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமத்தில் உள்ள காந்தி கிராமிய நிகர் நிலை பல்கலைக்கழகத்தின் 36 ஆவது பட்டமளிப்பு விழா வரும் நாளை வெள்ளிக்கிழமை பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறுகிறது. பல்கலைக்கழகத்தில் 2018, 19 ஆண்டுகள் மற்றும் 2019 -20ம் கல்வி ஆண்டில் பயின்ற மாணவர்களுக்கு பட்டம் வழங்க பாரத பிரதமர் நரேந்திர மோடி வருகை தர உள்ளார்.

இதனால் பல்கலைக்கழக வளாகத்தில் 300 நபர்கள் அமர கூடிய தீவிர ஏற்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகிறது. சின்னாளப்பட்டி நான்கு வழி சாலை பகுதியில் இருந்து பல்கலைக்கழகம் வரை புதிதாக சாலை அமைக்கும் பணிகள் வெகு விரைவாக நடைபெற்று வருகிறது. மேலும் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற உள்ள பல்நோக்கு அரங்கம் பிரம்மாண்டமாக நவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டு வருகிறது.

இந்த பணியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். தற்போது காந்த கிராமிய பல்கலைக்கழக வளாகப் பகுதியில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட போலீசார் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

வெடிகுண்டு சோதனை பிரிவினர் நுண்ணறிவு போலீசார் மற்றும் சிறப்பு பிரிவு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வெடிகுண்டு சோதனை மோப்ப நாய் லீமா வரவழைக்கப்பட்டு வெடிகுண்டு சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பல்கலைக்கழக வளாகத்திற்குள் கல்லூரி மாணவ மாணவியர் பேராசிரியர்கள் பல்கலைக்கழக பணியாளர்கள் உட்பட அனைவரும் தீவிரமாக சோதனை செய்யப்பட்ட பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் மதுரை விமான நிலையத்தை சுற்றி ட்ரோன் கேமரா பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. விமான நிலையம் சுற்றியுள்ள கிராமங்களில் வானவெடிக்கைகள் வெடிக்கக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல சின்னாளப்பட்டி, காந்திகிராமம். அம்பாத்துரை, அம்மைநாயக்கனூர், செம்பட்டி, காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் ட்ரோன் கேமரா பறக்க தடை என்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.