கத்தாரில் உலக கோப்பை கால்பந்து போட்டி எதிரொலி : மாதம் 5 கோடி முட்டை ஏற்றுமதி..!

நாமக்கல்: உக்ரைனில் நடக்கும் போர் காரணமாக, துருக்கி முட்டை கொள்முதல் விலையை உயர்த்தியதாலும், கத்தாரில் உலக கோப்பை கால்பந்து போட்டி துவங்க உள்ளதாலும், இந்திய முட்டைக்கு தேவை அதிகரித்து மாதம், 5 கோடி முட்டை ஏற்றுமதி செய்யப்படுகிறது.தேசிய அளவில், கோழி முட்டை உற்பத்தியில், தனிச் சிறப்பு பெற்றுள்ள நாமக்கல் மண்டலத்தில் இருந்து, 2007-08ம் ஆண்டில், பக்ரைன், ஓமன், குவைத், கத்தார் உள்ளிட்ட, 11 வளைகுடா நாடுகளுக்கும், ஆப்கானிஸ்தான், ஆப்பிரிக்க நாடுகளுக்கும், மாதம் தோறும், 12 முதல், 15 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன.இந்நிலையில், ஆறு மாதமாக இருந்த காலாவதியை, மூன்று மாதங்களாக குறைக்கப்பட்டதால், இந்திய முட்டைகள் ஏற்றுமதி செய்வது குறைக்கப்பட்டுள்ளது.மேலும், பறவை காய்ச்சல் நோயற்ற முட்டை உற்பத்தி மண்டலங்கள், இதுவரை இந்தியாவில் ஏற்படுத்தவில்லை. அதன் காரணமாகவும், ஐரோப்பிய நாடுகளின் நிர்பந்தத்தாலும், குவைத், ஈரான், துபாய் போன்ற கல்ப் நாடுகளுக்கு, 12 ஆண்டுகளாக முட்டை ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளது.தற்போது, துருக்கியில் முட்டை விலை அதிகரித்துள்ளதால், இந்திய முட்டைக்கு தேவை அதிகரித்து, ஏற்றுமதியும் மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. இது, பண்ணையாளர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.இது குறித்து கால்நடை மற்றும் விவசாய பண்ணையாளர்கள் வர்த்தக சங்க பொதுச்செயலாளர் டாக்டர் செந்தில் கூறியதாவது:இந்தியா முட்டைகளுக்கு வரவேற்பு இருந்ததால், ஏற்றுமதி அதிகரித்தது. முட்டை விலை உயர்ந்த நிலையில், ஐரோப்பிய நாடுகள், தங்களது சந்தையை விரிவுப்படுத்தும் நோக்கில், குறைந்த விலைக்கு முட்டையை இறக்குமதி செய்து, வளைகுடா நாடுகளுக்கு நிர்பந்தம் செய்ததால், இந்தியா முட்டை ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது.அதனால், பல ஆண்டுகளாக முட்டை ஏற்றுமதி தடை உள்ளது. தற்போது, ஐக்கிய அரபு நாடுகள், ஓமன், கத்தார், பக்ரின், மாலத்தீவு போன்ற நாடுகளுக்கு மட்டுமே, மாதம் தோறும், 1.50 கோடி முட்டை ஏற்றுமதி செய்யப்படுகிறது.இந்நிலையில், உக்ரைனின் நடந்து வரும் போர் காரணமாக, முட்டை ஏற்றுமதி தடைபட்டுள்ளது.அவற்றை பயன்படுத்தி, துருக்கி முட்டை கொள்முதல் விலையை உயர்த்தி உள்ளது. அதனால், குறைந்த விலையில் உள்ள, இந்திய முட்டைக்கு தேவை அதிகரித்துள்ளது.மேலும், கத்தாரில் வரும், 20ல் உலக கோப்பை கால்பந்து போட்டி துவங்குகிறது.

அதற்காக, ஏராளமான சுற்றுலா பயணிகள் கத்தாருக்கு வர உள்ளனர். அதனால், முட்டை தேவையும், நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. அதன் காரணமாக, இந்தியாவில் முட்டை ஏற்றுமதி அதிகரித்துள்ளது. தற்போது, மாதத்துக்கு, 5 கோடி முட்டை ஏற்றுமதி செய்யப்பபடுகிறது. தற்போதுள்ள கொள்முதல் விலை ஒரே சீராக இருக்கும் பட்சத்தில், ஏற்றுமதியும், வரும், 2023 ஜன., வரை நீடிக்கும்.கொள்முதல் விலை உயர்த்தினால், அமெரிக்கா முட்டைகள் குறைந்து விலைக்கு சப்ளை செய்து, நமக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடுவர். நமது ஏற்றுமதியும் பாதிக்கும். ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில், நாமக்கல் மாவட்டத்தை, பறவை காய்ச்சல் நோயற்ற முட்டை உற்பத்தி மண்டலமாக அறிவித்து, சான்றிதழ் வழங்கி, அனைத்து பண்ணையாளர்களும் ஏற்றுமதி செய்யும் வகையில், மத்திய, மாநில அரசுகள் உருவாக்கி தர வேண்டும்.அவ்வாறு செய்தால், உலகம் முழுவதும் இந்திய முட்டைகள் ஏற்றுமதி செய்வதற்கு வாய்ப்பாக அமைவதுடன், பண்ணையாளர்களின் வாழ்க்கை தரம் உயரும்.இவ்வாறு அவர் கூறினார்.