திமுக தங்கச் சுரங்கத்தையே கொட்டி கொடுத்தாலும் கோவை மக்கள் எனக்கு தான் வாக்களிப்பார்கள் – அண்ணாமலை நம்பிக்கை.!!

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளது. தேர்தல் பிரச்சாரம் நாளை மாலை 6 மணியோடு முடிவடையவுள்ளது.

இதனையடுத்து அரசியல் கட்சி தலைவர்கள் காலை முதல் இரவு வரை கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்தநிலையில் தேர்தல் தேதி நெருங்க,நெருங்க வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யும் பணியை அரசியல் கட்சிகள் ஆங்காங்கே தொடங்கியுள்ளது. இதனை கட்டுப்படுத்த தேர்தல் ஆணையமும் தீவிரமாக முயன்று வருகிறது. இந்தநிலையில் கோவை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பல்லடம் சட்டமன்ற தொகுதியில் 28 இடங்களில் தமிழக பாஜக தலைவரும் கோவை பாராளுமன்ற பாஜக வேட்பாளருமான அண்ணாமலை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது கரைப்புதூரில் அண்ணாமலை பேசுகையில் பாஜக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்களை பட்டியலிட்டார். மேலும் பாஜக தேர்தல் வாக்குறுதிகளையும் பொதுமக்கள் மத்தியில் எடுத்துரைத்தார். மேலும் திமுக அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றவிட்டதாகவும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், தங்கச் சுரங்கத்தையே கொண்டு வந்து கோவை தொகுதியில் கொட்டினாலும், இரவு நேரத்தில் திமுகவினர் கரண்டை ஆப் செய்துவிட்டு பணப்பட்டுவாடா செய்தாலும், தாய்மார்கள் அன்புத்தம்பி அண்ணாமலைக்கு தான் வாக்களிப்பார்கள் என எனக்கு தெரியும் என கூறினார்.

உங்களுக்காக நான் சண்டை போட்டுக் கொண்டிருக்கும்போது என் பக்கம் தான் நீங்கள் நிற்பீர்கள் என்ற நம்பிக்கை உண்டு என தெரிவித்தார். திமுக ஆட்சிக்கு வந்த 39 மாதங்களாக சம்பாதித்த பணத்தை கொண்டு வந்து கொட்டினாலும் தாமரை சின்னத்தில் தான் மக்கள் வாக்களிப்பார்கள் என எனக்கு நம்பிக்கை உண்டு என அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்தார்.