ஆட்சி அதிகாரம் முக்கியம் இல்லை… மக்கள் தான் எங்களுக்கு முக்கியம் – இபிஎஸ் பிரச்சாரம்.!!

திருச்சி அதிமுக வேட்பாளர் கருப்பையாவை ஆதரித்து திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் எடப்பாடி கே.பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது மேடையில் பேசுகையில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் இன்றைக்கு பொன் விழா கொண்ட கட்சி 30 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு பிடித்தமான மாவட்டம், திருச்சி மாவட்டம். காவிரி பாயக்கூடிய பசுமை நிறைந்த செல்வ செழிப்பு நிறைந்த மாவட்டம் திருச்சி மாவட்டம். இந்தியா கூட்டணி தான் ஆட்சி அமையப்போகிறது என்று ஸ்டாலின் சொல்லி வருகின்றனர். திமுக கூட்டணி முதன்மையாக விளங்குவது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி வருகிறார் மு.க.ஸ்டாலின். நாடாளுமன்றத் தேர்தலில் இவர்கள் யாரும் ஒற்றுமையாக இல்லாத போது இவர்கள் எப்படி பிரதமர் வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இவர்கள் கூட்டணியில் யார் பிரதமர் வேட்பாளர் என்று இதுவரை தெரிவிக்கவில்லை.

வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி எதிர்த்து இந்தியா கூட்டணியில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியினர் போட்டியிடுகின்றனர். இவர் போய் சேரவில்லை என்றால் இந்தியா கூட்டணி நன்றாக இருந்திருக்கும். ஸ்டாலின் போய் சேர்ந்ததால் இந்தியா கூட்டணியில் பலர் இருந்து மகிழ்ச்சியாக வெளியேறி வருகின்றனர். பாரதிய ஜனதா கட்சியில் இருந்து வெளியேறியது பொறுக்காமல் ,அதிமுக கள்ளக் கூட்டணி வைத்துள்ளார்கள் என்று விமர்சிக்கிறார்கள். அதிமுகவை பொருத்தவரை ஆட்சி அதிகாரம் முக்கியம் இல்லை மக்கள் தான் எங்களுக்கு முக்கியம் . மக்களுக்கான குரலாக நாடாளுமன்றத்தில் ஒழிப்பது தான் எங்களுக்கு முக்கியம்.

திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி அது ஒரு கட்சி அல்ல, மக்களுக்காக உருவாக்கப்பட்ட கட்சி அதிமுக. எட்டப்பர்கள் நிறைய பேர் இருந்தார்கள், சின்னத்தை முடக்க வேண்டும் என்று தீய சக்தி திமுகவோடு இணைந்து தொல்லை கொடுத்தார்கள். திமுக என்ற தீய சக்தியை ஒழிக்க வேண்டும். கடந்த 3 ஆண்டு காலம் ஆட்சி செய்த ஸ்டாலின் அவர்களே உங்களால் 1 மருத்துவ கல்லூரியாவது கொண்டு வர முடிந்ததா. திரு.ராசா மற்றும் கனிமொழி சிறையில் அடைக்கப்பட்டார்கள். அதுவும் எதிர் கட்சி ஆட்சி அல்ல , காங்கிரஸ் ஆட்சியிலேயே நடந்தது . இந்தியாவிலேயே பெரிய ஊழல் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தான். தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு வழங்கிய மடிக்கணினி போன்ற ஏழை எளிய குடும்பம் நடத்த கொண்டுவரப்பட்ட திட்டங்கள் அனைத்தையும் திமுக அரசு முற்றிலும் நிறுத்திவிட்டது. ஏழை மக்கள் பலன்பெறும் திட்டங்களை ஏன் நிறுத்தினீர்கள்.இந்தத் தேர்தலில் துரோகத்தை செய்தவர்களுக்கு பாடத்தை புகட்டுங்கள். அறிவுபூர்வமான மாணவர்கள் உருவாக்கியது அதிமுக அதை தடுத்தது திமுக. அதிமுக ஆட்சியில் என்ன சீரழித்தோம் என்பதை சொல்லுங்கள் அதற்கு நாங்கள் உரிய பதிலை சொல்கிறோம்.ஆட்சியில் இருக்கும் முதல்வர் நீங்கள் போற போக்கில் பொய்களை சொல்லிவிட்டு போகக்கூடாது.

அதிமுக அட்சியில் கொண்டு வந்த பல திட்டங்களை ஸ்டாலின் ஸ்டிக்கரை மட்டும் மாற்றி விட்டு, ரிப்பன் வெட்டுகிறார். 5 மாவட்டம் பலன் பெரும் மிகப் பெரிய திட்டம் காவிரி – குண்டாறு திட்டம், ஆனால் அதையும் இன்று கிடப்பில் போட்டு விட்டீர்கள். தமிழக மக்கள் சிந்தித்து செயல்பட கூடிய மக்கள். அதானால் ஸ்டாலின் அவர்களே, வீன் பழி சுமத்தி எங்களை பின் தள்ளி விடலாம் என நினைத்து விடாதீர்கள். ஆகையால் வருகின்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு வாக்களித்து, அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டுமென’ பொதுமக்கள் இடையே கேட்டுக் கொண்டார்.