இன்றே கடைசி நாள்… மக்களவை தேர்தல் தபால் வாக்களிக்க மறந்திடாதிங்க..!!

இன்றுடன் தபால் வாக்கு செலுத்தும் பணி நிறைவடைய உள்ள நிலையில், நாளை பிரச்சாரம் ஓய்வு பெறுகிறது.

நாட்டில் ஜனநாயக திருவிழாவாக கருதப்படும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில், முதல் கட்டமாக வரும் 19ம் தேதி வெள்ளிக்கிழமை தமிழகத்தில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி அன்றைய தினமே எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த சூழலில் கடந்த சில வாரங்களாக பிரதான அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், தேர்தல் ஆணையமும் பல்வேறு முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, பூத் சிலிப் விநியோகம், தபால் வாக்கு பெறும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு செலுத்தும் பனி இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதுபோன்று தேர்தல் பணியில் ஈடுபடுபவர்கள் தபால் வாக்கு செலுத்த இன்றே கடைசி நாளாகும்.

அதேபோல் தமிழகத்தில் மக்களவை தேர்தலை முன்னிட்டு அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வரும் நிலையில், நாளை மாலை 6 மணியுடன் தேர்தல் பரப்புரை ஓய்வு பெறுகிறது. இதனால் இன்றும், நாளையும் தமிழக தேர்தல் களம் அனல் பறக்க காணப்படும். மேலும், தமிழ்நாட்டில் கடந்த ஒருவாரமாக நடைபெற்று வந்த பூத் சிலிப் வழங்கும் பணியும் நிறைவு பெற்றுள்ளது.

விடுபட்டவர்களுக்கு இன்றைக்குள் பூத் சிலிப் வழங்கவும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பூத் சிலிப் கிடைக்காதவர்கள் வோட்டர்ஸ் ஹெல்ப்லைன்  மொபைல் செயலியில் பூத் சிலிப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இல்லையென்றாலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் வாக்களிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.