நாளுக்கு நாள் அதிகரிக்கும் வாகன நெரிசலால் திக்குமுக்காடும் சிங்காநல்லூர்… மேம்பாலம் பணிகளை விரைந்து தொடங்க கோவை மக்கள் கோரிக்கை..!

கோவை மாநகரில் சிங்காநல்லூர் ஒரு முக்கியமான பகுதியாக உள்ளது. இங்குள்ள பஸ் நிலையத்தில் இருந்து கோவையின் பெரும்பாலான பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் இயக்கபடுகின்றன. மேலும், மதுரை, திருச்சி, தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் இந்த பஸ் நிறுத்தத்தில் இருந்து மட்டுமே இயக்கப்படுகின்றன.
இதனால் பஸ் நிலையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் எப்போதும் மக்கள் நெரிசல் இருக்கும். பண்டிகை காலங்களில் இந்த பஸ் நிலையத்தில் நிற்கக் கூட இடம் இல்லாதபடி கூட்டம் அலைமோதும். சமீபத்தில் திருச்சி சாலையில், ராமநாதபுரம் சிக்னலை தாண்டி செல்லும் வகையில் மேம்பாலம் அமைக்கப்பட்டது. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறைந்துள்ளது.
இதேபோல் சிங்காநல்லூர் சிக்னலை கடந்து செல்லும் வகையில் சிக்னல் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இங்கு மேம்பாலம் இல்லாத காரணத்தால் காலை மற்றும் மாலை நேரங்களில் சிக்னல் மற்றும் திருச்சி சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பண்டிகை மற்றும் முகூர்த்த காலங்களில் சிங்காநல்லூர் உழவர் சந்தை தொடங்கி, ஒண்டிப்புதூர் பாலத்தை கடக்கும் வரையில் வாகனங்கள் வரிசைகட்டி நிற்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
திருச்சி சாலையும் அகலப்படுத்தப்படாமல் இருப்பதால், நாளுக்கு நாள் அதிகரிக்கும் வாகன நெரிசலில் பொதுமக்கள் திண்டாடி வருகின்றனர். இதனிடையே உடனடியாக சிங்காநல்லூரில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.