காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு… இளம் வயது வாலிபர், பள்ளி மாணவி தற்கொலை..

திருச்சி மாவட்டத்திற்கு அருகே பெரம்பலூர் அம்மாபாளையத்தில், காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் 20 வயது கல்லூரி மாணவர், 15 வயது பள்ளி மாணவியுடன் சேர்ந்து கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி, பெரம்பலூர் அருகே அம்மாபாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் யுகேஷ் (20) தனியார் கல்லூரி ஒன்றில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் 3ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், யுகேஷூம், அதே ஊரைச் சேர்ந்த 15 வயதுடைய 9ம் வகுப்பு மாணவி ஒருவரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர்கள் காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிய வந்து, இரு வீட்டாரும் இவர்களது காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களாகவே இருவரும் சோகமாக காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்றிரவு திடீரென யுகேஷும் மாணவியும் தத்தமது வீடுகளில் இருந்து மாயமாகியுள்ளனர். இருவரது பெற்றோரும், காதலித்து வந்த தங்களது பிள்ளைகள் வேறு ஊருக்கு ஓடி சென்று விட்டதாக கருதி பல இடங்களிலும் இருவரையும் தேடி உள்ளனர். அப்போது அதே பகுதியில், யுகேஷின் உறவினர் ராஜேஷ் என்பவருக்கு சொந்தமான வயலில் உள்ள கிணற்றில் இரண்டு சடலங்கள் மிதப்பதாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், இரு உடல்களையும் மீட்டபோது, அது மாயமான யுகேஷ் மற்றும் மாணவியின் உடல்கள் என்பது தெரியவந்தது.
இதையடுத்து பிரேத பரிசோதனைக்காக இருவரது உடல்களும் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் மனம் உடைந்து காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டார்களா, அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது தொடர்பாக அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.