கோவையில் போலி மது தயாரித்த 2 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.!!

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் சட்டத்திற்கு விரோதமாக போலி மதுபானம் தயாரித்து விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது . இது தொடர்பாக கேரளா மாநிலத்தை சேர்ந்த மோகன் மகன் மது@மாது (வயது 45) மற்றும் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த பாலச்சந்திரன் தெலகி மகன் ஸ்ரீதர் (வயது 47) ஆகியோரை கடந்த 11-12-2023 அன்று பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேற்படி குற்ற செயலில் ஈடுபட்ட மது என்ற மாது(45) மற்றும் ஸ்ரீதர் (47) ஆகிய இரண்டு நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் பரிந்துரை செய்தார். அப்பரிந்துரையின் பேரில் கோவை மாவட்ட ஆட்சியர்  கிராந்தி குமார் பாடி மேற்கண்ட நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். அவ்வுத்தரவின் அடிப்படையில் சட்டத்திற்கு விரோதமாக கலப்பட மதுபானம் தயார் செய்த வழக்கு குற்றவாளிகளான மது@மாது(45) மற்றும் ஸ்ரீதர் (47) ஆகியோர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இதற்கான உத்தரவு நகல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்களுக்கு நேற்று வழங்கப்பட்டது.
மேலும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தாலோ, பொது சுகாதார பராமரிப்பிற்கு பாதகமாக செயல்பட்டாலோ அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் சட்ட விரோதமாக கலப்படம் மதுபானம் தயார் செய்த வழக்கில் இதுவரை 9 குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.