கோவை மத்திய சிறை வளாகத்தில் இரவில் அத்துமீறி புகுந்த மேலும் ஒரு வாலிபர் கைது..!

கோவை காந்திபுரத்தில் உள்ள மத்திய சிறை வளாகத்தில் அனுமதி இல்லாமல் வெளிநபர்கள் உள்ளே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று இரவில் ஒருவர் அத்துமீறி உள்ளே புகுந்தார். அவரை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய ஆயுதப்படை போலீசார் பிடித்து சிறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.இதுகுறித்து மத்திய சிறை ஜெயிலர் சிவராஜ் ரேஸ்கோர்ஸ் போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில் அவர் நீலகிரி மாவட்டம் ,கூடலூர் நடுப்பட்டணம் ,ஜெகஜீவன் ராம் காலனி சேர்ந்த ராஜ்குமார் (வயது 36) என்பது தெரியவந்தது.இவர் ஊட்டியில் உள்ள ஒரு ஓட்டலில் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார்.கடந்த 2 நாட்களுக்கு முன்பு மத்திய சிறை வளாகத்தில் இதேபோல அத்துமீறி புகுந்ததாக கேரளாவை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.