பெருநகர சென்னை மாநகராட்சியில் ஊழல் புகாரில் சிக்கிய 7 அதிகாரிகள் அதிரடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அண்மையில் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு இயக்குனரகம் நடத்திய அதிரடி சோதனையை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு ஊழல் ஒழிப்புக்கு முக்கியத்துவம் தந்து செயல்படுகிறது. முதலமைச்சர் விஜய் மக்கள் யாருக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டாம், லஞ்சம் வாங்குவோர் குறித்து மக்கள் புகார் தெரிவிக்கலாம் என அறிவித்தார். மறுபுறம் லஞ்ச ஒழிப்பு துறையும் ஊழல் மற்றும் முறைகேடுகளை தடுக்க பல்வேறு இடங்களில் சோதனை நடத்தியது.ஜூலை 3ஆம் தேதி, சென்னை திரு.வி.க. நகர் மண்டல அலுவலகத்தில் ஊழல் நடப்பதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில், 9 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். விசாரணையின் முடிவில், தொடர்புடைய அதிகாரிகள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட 7 அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இடைநீக்கம் செய்யப்பட்டவர்களில் திரு.வி.க. நகர் வார்டு 74இன் உதவி பொறியாளர் ஒருவரும் அடங்குவார்.
திரு.வி.க நகர் வார்டு 74 சென்னை மேயர் பிரியா பிரதிநிதித்துவம் செய்யும் வார்டு என்பது குறிப்பிடத்தக்கது.திரு.வி.க. நகர் மண்டலத்தின் நிர்வாக பொறியாளர் ஆர்.
சரவணன் மற்றும் உதவி பொறியாளர் டி. சரஸ்வதி ஆகியோரின் அலுவலகத்தில் கணக்கில் காட்டப்படாத பணம், தங்க நகை மற்றும் தங்க சேமிப்பு திட்டங்கள் தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.சரஸ்வதியின் பெயரில் மாதம் 25,000 ரூபாய் வீதம் 246 மாதங்களுக்கும், மற்றொரு திட்டத்தில் மாதம் 5,000 ரூபாய் வீதம் 182 மாதங்களுக்கும் முதலீடு செய்ததற்கான ஆவணங்கள் சிக்கின.அடுத்ததாக சரவணனின் அலமாரியில் இருந்து 32,000 ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவை ஒப்பந்ததாரர்களால் பரிசாக வழங்கப்பட்டவை என அவர் அளித்த வாக்குமூலம், லஞ்சம் வாங்கியதற்கான ஆதாரமாக லஞ்ச ஒழிப்புத்துறையால் பதிவு செய்யப்பட்டுள்ளது.அதே போல சரவணனின் ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரையிலான வங்கி கணக்குகளை ஆய்வு செய்ததில், எந்தவித ஆதாரமும் இன்றி 10.61 லட்சம் ரொக்கமாக டெபாசிட் செய்யப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.மேலும் உதவி பொறியாளர் சரஸ்வதி, சோதனையின் போது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் முறையான விளக்கம் அளிக்காமல் தவிர்த்ததாக கூறப்படுகிறது. அவர் ஒரு கூட்டத்தில் பங்கேற்றதாக கூறியதை, அதிகாரிகள் சரிபார்த்ததில் அது பொய் என தெரியவந்தது. அவரது கூகுள் பே பரிவர்த்தனைகளை ஆய்வு செய்ததில், கடந்த 6 மாதங்களில் 1.71 லட்சம் ரூபாய் அளவுக்கு முறைகேடான பரிவர்த்தனைகள் நடந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.இதேபோல், அதே வளாகத்தில் பணிபுரியும் நகரமைப்பு உதவி நிர்வாக பொறியாளர் ரவிவர்மன் என்பவரின் கணக்குகளில் ரூ.2.39 லட்சம் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.அது தவிர முறையான கணக்கு பதிவேடுகள் இல்லாமல் அதிகாரிகளிடையே புழக்கத்தில் இருந்த 1.39 லட்சம் ரூபாய் ரொக்கம் காரணமாகவும் மேலும் 4 ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் இளநிலை உதவியாளர் மணிகண்டன், கணக்காளர் ஏ.ஸ்ரீராமுலு, சுகாதார அதிகாரி ஏ. மஞ்சித் மற்றும் பாதுகாப்பு ஆய்வாளர் ஆர். கோதண்டன் ஆகியோர் அடங்குவர்.இந்த ஊழல் குறித்து இரண்டு மாதங்களுக்குள் விசாரணையை முடித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து அவர்களை பணியிலிருந்து நிரந்தரமாக நீக்க லஞ்ச ஒழிப்புத்துறை திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது







