ஒரே நாடு… ஒரே தங்கம் விலை… இந்தியாவில் முதல் மாநிலமாக ஆகும் கேரளா..!

நாடு முழுவதும் ஒரே விலையில் தங்கம் வாங்கும் வகையில் ஒரே நாடு,ஒரே தங்கம் விலை என்ற முன்னெடுப்பை இந்தியாவில் முதல் மாநிலமாக கேரளா தொடங்கியுள்ளது. உலோகங்களில் ஒன்றாக இருந்தாலும், மற்ற உலோகங்களை விட விலையில் நெருங்க முடியாத இடத்தில் இருப்பது தங்கம். தங்கம் மீதான மக்களின் ஈர்ப்பு என்பது அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதற்கு அண்மையில் வந்துபோன பண்டிகை காலமே சாட்சி. இந்தியாவில் பண்டிகை காலங்களில் அதிகளவில் தங்கம் விற்பனை ஆகியுள்ளது.

தங்கம் விலையை பொறுத்தவரை மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும். சர்வதேச விலை, வரி, டாலர் மதிப்பு போன்றவற்றை கணக்கிட்டு அந்தந்த மாநில நகை வியாபாரிகள் சங்கம் தங்கம் விலையை நிர்ணயம் செய்கின்றன.

இந்நிலையில், இந்தியாவிலேயே ‘ஒரே இந்தியா, ஒரே தங்கம் விலை’ கொள்கையை அறிமுகப்படுத்திய முதல் மாநிலமாக கேரளா மாறியுள்ளது. இதன் விளைவாக, வங்கி விகிதங்களின் அடிப்படையில் ஒரே மாதிரியான தங்கத்தின் விலை இப்போது மாநிலத்தில் கிடைக்கும். 916 தூய்மையான 22 காரட் தங்கத்திற்கும் இது பொருந்தும். பொதுவாக அக்டோபர் முதல் மார்ச் வரையிலான திருமண சீசனில் தங்கத்தின் தேவை அதிகரித்து வருவதால் இந்த முடிவு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் தங்கம் நுகர்வில் தென் இந்தியாவின் பங்கு என்பது 40 சதவீதமாக உள்ளது. இதில் மூன்றில் ஒரு பங்கு கேரளாவுடையது. தற்போது எடுக்கப்பட்டுள்ள முடிவின்படி, கேரளாவைச் சேர்ந்த முன்னணி நகைக்கடைகளான மலபார் கோல்டு & டயமண்ட்ஸ், ஜோயாலுக்காஸ் மற்றும் கல்யாண் ஜூவல்லர்ஸ் ஆகியவை வங்கி விகிதத்தின் அடிப்படையில் வாடிக்கையாளர்களுக்கு ஒரே மாதிரியான தங்க விலையை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒவ்வொரு மாநிலத்திலும் வங்கி விலையை விட கிராமுக்கு ரூ.150 முதல் ரூ.300 வரை கூடுதல் விலைக்கு தங்கம் விற்கப்படுகிறது. கேரளாவில் ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு விலைகளில் தங்கம் விற்கப்படுகிறது. ஒரே விலை திட்டத்தின் மூலம், நியாயமான விலையில் நுகர்வோர்கள் தங்கத்தை வாங்க முடியும்” என மலபார் குழுமத்தின் தலைவர் அகமத் தெரிவித்துள்ளதாக பிடிஐ ஊடகம் தெரிவித்துள்ளது.