அன்னூரில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை.!!

கோவை அருகே அன்னூரில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் 10 மணி நேரம் சோதனை நடத்தினர்.கோவை மாவட்டம், அன்னுார் பக்கம் உள்ள கணேசபுரத்தை சேர்ந்தவர் அன்புராஜ்; அ.தி.மு.க., பிரமுகர். இவரது மகள் சந்திரகாந்தா (வயது 48) இவர் திருப்பூரில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். பின்னர் சேலத்துக்கு மாற்றப்பட்ட நிலையில் ,சில மாதங்களாக மருத்துவ விடுப்பில் உள்ளார்.கணேசபுரத்தில் உள்ள இவரது வீட்டில் நேற்று காலை 8:05 மணிக்கு, லஞ்ச ஒழிப்புத் துறை ஈரோடு மாவட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேகா தலைமையில், ஒரு சிறப்பு சப் -இன்ஸ்பெக்டர்., மற்றும் 4 போலீசார் என 6 பேர் கொண்ட குழு சோதனையில் ஈடுபட்டது..
காலை 8:05 மணிக்கு தொடங்கிய சோதனை மாலை 6:10க்கு முடிந்தது.வீட்டில், தரைதளம், முதல் தளம், இரண்டாம் தளம் என மொத்தம் 6 ஆயிரம் சதுர அடியில் அமைந்துள்ள அந்த வீட்டின் அனைத்து அறைகளிலும், பீரோ, லாக்கர் உள்ளிட்டவைகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர்.அங்கு என்னென்ன பொருட்கள் கைப்பற்றப்பட்டன என்ற விவரத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.