வரும் 19ம் தேதி காசியில் தமிழ் சங்கமம் நிகழ்ச்சி: பங்கேற்கிறார் பிரதமர் மோடி – அண்ணாமலை தகவல்..!

கும்பகோணம்: மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை பாதிப்புகளை பாஜ மாநில தலைவர் அண்ணாமலை நேற்று பார்வையிட்டார்.

இதைதொடர்ந்து தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் நேற்றிரவு தங்கினார். இன்று காலை கும்பகோணத்தில் இருந்து ராமேஸ்வரம் – வாரணாசி விரைவு ரயில் மூலம் சென்னை புறப்பட்டு சென்றார்.
முன்னதாக கும்பகோணம் ரயில் நிலையத்தில் அண்ணாமலை அளித்த பேட்டி: இந்தியாவில் இருந்து பல்வேறு ரயில்கள் மூலம் காசியில் நடைபெற உள்ள தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு மாணவர்கள் செல்கிறார்கள்.

சென்னையில் இருந்து இன்று புறப்படும் ரயிலில் 216 மாணவர்கள் செல்கின்றனர். அவர்களை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் ஒன்றிய அமைச்சர் முருகன் ஆகியோர் வழியனுப்பி வைக்கின்றனர். வரும் 19ம் தேதி காசியில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று தமிழகத்தில் இருந்து சென்ற மாணவர்களை சந்திக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.