தீபாவளியையொட்டி கோவையில் இருந்து நாளை முதல் சிறப்பு பஸ்கள் இயக்கம் – தகவல்கள் தெரிந்து கொள்ள பேனர்கள் வைப்பு..!

கோவை: தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வரும் 24-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது.
நாளை முதல் இதையொட்டி கோவையில் உள்ள பல்வேறு தொழில் நிறுவனங்களில் வேலை செய்து வரும் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த தொழிலாளர்கள் தீபாவளி பண்டிகைக்கு தங்களது சொந்த ஊா்களுக்கு செல்லவார்கள். அவர்களுக்கு வசதியாக நாளை முதல் 23-ந் தேதி வரை கோவையில் இருந்து மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. மதுரைக்கு 100 பஸ்களும், தேனிக்கு 40 பஸ்களும், திருச்சிக்கு 50 பஸ்களும், சேலத்துக்கு 50 பஸ்களும் என மொத்தம் 240 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

போக்குவரத்து மற்றும் பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் தீபாவளி பண்டிகைக்காக இயக்கப்படும் சிறப்பு பஸ்கள் பல்வேறு பஸ் நிலையங்களில் இருந்து இயக்கப்படுகிறது. வழக்கமாக, போக்குவரத்து நெரிசலை தடுக்க கொடிசியாவில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டு, அங்கிருந்து பல்வேறு இடங்களுக்கு பஸ்கள் இயக்கப்படும். ஆனால், இந்த ஆண்டில் சிறப்பு பஸ்கள் காந்திபுரம் மத்திய பஸ் நிலையம், சிங்காநல்லூர் பஸ் நிலையம், மேட்டுப்பாளையம் புதிய பஸ் நிலையம் மற்றும் சூலூர் பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது.

இதில் சிங்காநல்லூர் பஸ் நிலையத்தில் இருந்து மதுரை, தேனி, தென்மாவட்டங்களுக்கும், சூலூர் பஸ் நிலையத்தில் இருந்து கரூர், திருச்சிக்கும், காந்திபுரம் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சேலம், திருப்பூர், ஈரோடு, ஆனைகட்டி வழியாக செல்லும் பஸ்களும், மேட்டுப்பாளையம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஊட்டி, மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம் செல்லும் பஸ்களும் இயக்கப்பட உள்ளது. இந்த பஸ் நிலையங்களுக்கு பொதுமக்கள் எளிதில் செல்வதற்காக காந்திபுரம் நகரப் பஸ் நிலையம், உக்கடம் பஸ் நிலையத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. பொதுமக்கள் பஸ் நிலையங்களின் தகவல்களை எளிதாக தெரிந்து கொள்ளும் வகையில் பஸ் நிலையங்களில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில்  அறிவிப்பு பேனர்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளது.