சிவகாசி பட்டாசு தொழிலுக்கு அடித்தது ஜாக்பாட்…

இந்தியாவின் பட்டாசு உற்பத்தியின் தலைநகரமாகத் திகழும் விருதுநகர் மாவட்டம் சிவகாசி, ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை எட்டியுள்ளது.

ஆண்டிற்கு ரூ.6,000 கோடி விற்பனை கொண்ட முன்னணி ஐரோப்பிய பட்டாசு இறக்குமதி நிறுவனம் ஒன்று, சிவகாசியில் உள்ள பட்டாசு உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாக பட்டாசுகளைக் கொள்முதல் செய்யத் தயாராகி வருகிறது. இதற்கான முதற்கட்டமாக, சுமார் 50 ஏற்றுமதி கன்டெய்னர்கள் அளவிலான பட்டாசுகளை வாங்க அந்த ஐரோப்பிய நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளதாகத் தமிழக அரசின் தொழில் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டுகளில் இந்த வர்த்தகத்தை மேலும் பல மடங்கு உயர்த்தவும் அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

தமிழகத் தொழில் துறை அமைச்சர் எஸ். கீர்த்தனா மேற்கொண்ட தொடர் முயற்சிகள் மற்றும் சர்வதேச வர்த்தக அணுகுமுறைகளின் விளைவாகவே இந்த ஏற்றுமதி சாத்தியமாகியுள்ளது. சிவகாசி பட்டாசுத் தொழிலை உலகளாவிய சந்தைக்குக் கொண்டு செல்லும் நோக்கில், சர்வதேச இறக்குமதியாளர்களுடன் தொழில் துறை தீவிரப் பேச்சுவார்த்தைகளை நடத்தி வந்தது.

சீனாவின் ஆதிக்கத்தில் இருக்கும் உலகளாவிய பட்டாசுச் சந்தையில், சிவகாசி பட்டாசுகளுக்குப் புதிய இடத்தை உருவாக்கித் தருவதே இந்த முயற்சியின் முதன்மை நோக்கமாகும். இந்த ஐரோப்பிய ஆர்டர் மூலம் சிவகாசிப் பகுதி உற்பத்தியாளர்களின் பொருளாதாரம் வளர்ச்சி அடைவதோடு, ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபகாலமாக, சர்வதேச நாடுகளின் கடுமையான தரக்கட்டுப்பாடுகள் மற்றும் சுற்றுச்சூழல் விதிகளைப் பூர்த்தி செய்யும் வகையில் சிவகாசியில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. ஐரோப்பிய ஒன்றியம் போன்ற மிகக் கடுமையான விதிகளை கொண்ட நாடுகளின் சந்தையில் சிவகாசி பட்டாசுகள் நுழையவிருப்பது, இந்திய உற்பத்தியாளர்களின் திறனுக்கும் உலகத் தரத்திற்கும் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகக் கருதப்படுகிறது. வரும் காலங்களில் ஆலைகளில் விபத்தில்லாப் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, சர்வதேச அளவிலான ஏற்றுமதியை மேலும் அதிகரிக்கத் தேவையான அனைத்து உள்கட்டமைப்பு மாற்றம் உதவிகளையும் தமிழக அரசு வழங்கும் எனத் தொழில் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.