கோவை அவினாசி ரோட்டில் 5 இடங்களில் சுரங்கபாதை : 10 நாட்களில் அறிக்கை அளிக்க கலெக்டர் உத்தரவு.!

கோவை அவினாசி ரோட்டில், உப்பிலிபாளையம் முதல் கோல்டு வின்ஸ் வரை, 10.1 கி.மீ. துாரத்துக்கு ரூ.1,621.30 கோடியில், மாநில நெடுஞ்சாலைத்துறையால் மேம்பாலம் கட்டப்படுகிறது. இது, 17.25 மீட்டர் அகலத்தில் நான்கு வழிச்சாலையாக அமைகிறது. பெட்டி வடிவ கர்டர் தயாரிக்கப்பட்டு, செக்மென்ட் தொழில் நுட்ப முறையில், ஓடுதளம் அமைக்கப்படுகிறது.

மேலும், 10½ மீட்டர் அகலத்தில் ரோட்டின் இருபுறமும், சர்வீஸ் ரோடும், ஒன்றரை மீட்டர் அகலத்தில் மழை நீர் வடிகாலுடன் நடைபாதையும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆங்காங்கே மழை நீர் வடிகால் கட்டும் பணி நடந்து வருகிறது. பொதுமக்கள் சிரமமின்றி சாலையைக் கடக்க, கிருஷ்ணம்மாள் கல்லுாரி, கே.எம்.சி.எச்., ஆஸ்பத்திரி, ஜி.ஆர்.ஜி., பள்ளி, பி.எஸ்.ஜி. கல்லுாரி மற்றும் லட்சுமி மில் சந்திப்பு ஆகிய 5 பகுதிகளில் சுரங்க நடைபாதை அமைக்க மற்றும் உயர்மட்ட நடைபாதை அமைக்கவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கலெக்டர் கிராந்தி குமார் பாடி தலைமையில் நடந்த சாலை பாதுகாப்புக் குழு கூட்டத்தில் இது பற்றி விவாதிக்கப்பட்டது. மேம்பாலம் பயன்பாட்டுக்கு வந்தாலும், ரோட்டிலும் போக்குவரத்து சிரமம் வரக்கூடாது. பொதுமக்கள் பாதுகாப்பாக பயணம் செய்யும் வகையில், சுரங்க நடைபாதை அமையும் இடங்களை தேர்வு செய்ய வலியுறுத்தப்பட்டது. இதற்காக கமிட்டி அமைக்க கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.

இதையடுத்து மக்கள் தரப்பு கருத்துக்களை தெரிவிக்க, சாலை பாதுகாப்பு கமிட்டி உறுப்பினர் அடங்கிய குழு அமைக்கப்படுகிறது. இக்குழுவினர் கள ஆய்வு செய்து, 10 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை பாலத்தின் தூண்களுக்கு இடையே மையத் தடுப்பு கட்டுவதற்கு முன், எந்தெந்த இடங்களில், வாகன போக்குவரத்துக்கு இடைவெளி விட வேண்டும் என்பதும் முடிவு செய்யப்படவுள்ளது.
இதுகுறித்து மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறும்போது,
சுரங்க நடைபாதை, உயர்மட்ட நடைபாதை அமைக்க, ஏற்கனவே இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதிகமான மக்கள் ரோட்டைக் கடக்கும் பகுதிகளை அடையாளம் கண்டு, சுரங்க நடைபாதை அமையும் சில இடங்களை மாற்றியமைக்கலாம் எனக் கூறுவதால், கமிட்டி கள ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க உள்ளது. அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டு, ஒப்புதல் பெற்று செயல்படுத்தப்படும் என்றனர்.