ஜெப கூடத்தில் உணவு சாப்பிட்ட மூதாட்டி பரிதாப பலி – 7 பேருக்கு வாந்தி, மயக்கம்.!!

கோவை மாவட்டம் ஆனைமலையில் உள்ள தெற்கு குமரன் கோட்டம் வீதியில் வசித்து வருபவர் பாப்பாத்தி அம்மாள் என்கிற எஸ்தர் ராணி ( வயது 67)  கடந்த 8 ஆண்டுகளாக இவர் வீட்டில் வைத்து பெந்தகோஸ்தே திருச்சபை நடத்தி வருகிறார். இதில் 25க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் ஜெபம் நிகழ்ச்சி நடத்துவது வழக்கம். நேற்று ஜெப வழிபாடு முடிந்து மதிய உணவு சாப்பிட்டனர். இந்த நிலையில் இந்த உணவை சாப்பிட்ட ஆனைமலையை சேர்ந்த ராஜம்மாள் ( வயது60) சரவணக்குமார் ( வயது 27) நந்தினி ( வயது 26) எஸ்தர் ராணி பழனியம்மாள் ( வயது 60) மீனாட்சி ( வயது 48) ராஜேஸ்வரி ( வயது48) சிவகாமி ( வயது 70) ஆகிய 8 பேர் வாந்தி எடுத்து மயங்கினார்கள். அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வேட்டைக்காரன் புதூர் மற்றும் அம்பராம்பாளையம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சிகிச்சை பலன் அளிக்காமல் சிவகாமி ( வயது 70) இறந்துவிட்டார். மற்றவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .இது பற்றி தகவல் அறிந்ததும் சுகாதாரத் துறையினர் அங்கு சென்று உணவு மாதிரிகளை ஆய்வுக்கு எடுத்து சென்றுள்ளனர். இது தொடர்பாக ஆனைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..