தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தம் அறிவிப்பு- மின் தடை ஏற்படும் அபாயம்..!

மிழகத்தில், ஊதிய உயர்வு உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜனவரி 10-ம் தேதி மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர். இதனால், மின்தடை ஏற்படும் அபாயம் உள்ளது.

மூன்று ஆண்டுகளாகியும் மின்வாரிய ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு அறிவிக்கப்படாமல் உள்ளது. அத்துடன், காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும் மின்வாரிய ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதன் காரணமாக மத்திய மற்றும் மாநில அரசை கண்டிக்கும் வகையில் அவ்வப்போது மின்வாரிய ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த 2-ம் தேதி, தமிழகம் முழுவதும் உள்ள மின்வாரிய அலுவலகங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன்போது, மின்வாரிய ஊழியர்கள் பட்டை நாமம் அச்சிடப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தி நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், வரும் ஜனவரி 10-ம் தேதி மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். காலி பணியிடங்களை நிரப்புதல், ஊதிய உயர்வு உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 10-ம் தேதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக மின்வாரிய ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

வேலை நிறுத்தத்தின் அவசரம் குறித்த நோட்டீசை வரும் 20ம் தேதி அரசுக்கு வழங்கி, 27-ம் தேதி ஆயத்த விளக்கக் கூட்டம் நடைபெறும் என்றும் மின்வாரிய தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.