டாஸ்மாக் பார்கள் விதிகளில் தமிழக அரசு தளர்வுகளை கொண்டு வந்தது குடிமகன்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அதே வேளையில் இது பொதுமக்களுக்கு கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவிக்கின்றனர்.
தமிழகம் முழுவதும் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் மதுபானக்கடைகள் இயங்கி வரும் நிலையில், அரசுக்கு வருமானம் ஈட்டிக்கொடுப்பதில் டாஸ்மாக் முக்கிய பங்கு வகித்து வருகிறது. தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த விஜய்யின் தவெக அரசு சுமார் 700 டாஸ்மாக் கடைகளை மூடினாலும் மறுபக்கம் டாஸ்மாக் வருமானத்தை உயர்த்துவது குறித்து ஆலோசித்து வருகிறது.அந்த வகையில் தமிழகத்தில் 4,000-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுபானக் கடைகளுடன் இணைந்து செயல்படும் ‘பார்’களுக்கான விதிகளில் தமிழ்நாடு அரசு முக்கியத் தளர்வுகளை அறிவித்து அரசிதழில் வெளியிட்டுள்ளது. இதுவரை, டாஸ்மாக் கடை அமைந்துள்ள அதே கட்டிடத்தில் மட்டுமே பார் இயங்க அனுமதி அளிக்கப்பட்டு வந்தது.மேலும், டெண்டர் எடுப்பவர் அந்த குறிப்பிட்ட கட்டிட உரிமையாளரிடம் மட்டுமே தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டியிருந்தது. இதனால் ஒரு சில குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே டெண்டரில் ஆதிக்கம் செலுத்தும் சூழல் இருந்தது.
தற்போது கொண்டுவரப்பட்டுள்ள புதிய சட்டத்திருத்தத்தின்படி டாஸ்மாக் அமைந்திருக்கும் இடத்திலிருந்து 100 மீட்டர் சுற்றளவுக்குள் உள்ள எந்தவொரு கட்டிடத்திலும் பார் அமைக்க அனுமதி பெறலாம். விருப்பமுள்ளவர்கள் 100 மீட்டர் எல்லைக்குள் இருக்கும் கட்டிட உரிமையாளரிடம் NOC பெற்றால் போதுமானது. சம்பந்தப்பட்ட இடத்தைப் மாவட்ட ஆட்சியர் நேரடியாக ஆய்வு செய்து தகுதி சான்றிதழ் வழங்கிய பின் பார் இயங்க அனுமதி அளிக்கப்படும். இதன் மூலம் பார் டெண்டரில் அதிக போட்டி உருவாகி அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கூட்ட நெரிசல் குறையும்: கடை இருக்கும் அதே கட்டிடத்தில் பார் இயங்கும்போது ஏற்படும் அதிகப்படியான கூட்ட நெரிசல் மற்றும் இடநெருக்கடி இனி குறைய வாய்ப்புள்ளது. 100 மீட்டர் சுற்றளவில் பரந்த மற்றும் காற்றோட்டமான புதிய இடங்களில் பார்கள் அமையும்போது, உட்காரும் வசதி மற்றும் அடிப்படை உள்கட்டமைப்பு மேம்படக்கூடும்.டெண்டரில் பல புதிய நபர்கள் பங்கேற்பதால், பார்களில் வழங்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் தரம் உயர வாய்ப்புள்ளது.
தமிழக அரசின் இந்த உத்தரவு குடிமகன்களுக்கு மகிழ்ச்சி அளித்தாலும் இது மக்களை கடுமையாக பாதிக்கும் என்று பாமக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அதாவது இதுவரை ஒரு குறிப்பிட்ட கட்டிடத்திற்குள் மட்டுமே முடங்கியிருந்த மதுபானக் கடை சார்ந்த செயல்பாடுகள், இனி 100 மீட்டர் சுற்றளவு வரை பரவும்.
டாஸ்மாக் கடைக்கு சற்று தள்ளி வீடுகள், சிறிய கடைகள் அல்லது பாதசாரிகள் நடமாடும் பகுதிகளில் பார்கள் அமைந்தால், அப்பகுதியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நடமாடுவது கடினமாகும். மது அருந்திவிட்டு 100 மீட்டர் எல்லைக்குள் சுற்றித் திரிபவர்களால் பொதுமக்கள், குறிப்பாக இரவு நேரங்களில் செல்வோர் தேவையில்லாத இடையூறுகளைச் சந்திக்க நேரிடும்.பிரதான சாலைகளில் அமைந்திருக்கும் கடைகளுக்கு அருகிலுள்ள சந்து அல்லது சிறிய வீதிகளில் பார்கள் அமைக்கப்பட்டால், வாகன நிறுத்துமிடம் மற்றும் போக்குவரத்து பாதிப்புகள் அதிகரிக்கும். கிட்டத்தட்ட 700 டாஸ்மாக் கடைகளை மூடியுள்ளதாகவும் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று கூறும் தவெக அரசு பார்கள் அமைக்கும் எல்லையை 100 மீட்டர் வரை விரிவுபடுத்துவது மதுப்பயன்பாட்டை ஊக்கப்படுத்தும் செயல் என அரசியல் கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். 100 மீட்டர் தளர்வு என்ற பெயரில், பார்கள் குடியிருப்பு பகுதிகள், சிறிய வீதிகள் மற்றும் பொதுமக்கள் புழங்கும் இடங்களுக்கு மிக அருகில் வந்துவிடும் என அச்சம் தெரிவிக்கின்றனர். அரசு மக்களின் நலனைக் காட்டிலும், பார் டெண்டர் மூலம் கிடைக்கும் கூடுதல் வருவாயை மட்டுமே கருத்தில் கொண்டு இந்த விதியைத் தளர்த்தியுள்ளது என்று அரசியல் தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர்.







