வாகன ஓட்டிகளே உஷார்… சென்னையில் வேகமாக சென்றால் அபராதம் – புதிய விதி அமல்..!

சென்னையில் வாகனங்களுக்கான புதிய வேகக்கட்டுப்பாடு இன்று முதல் அணலுக்கு வந்துள்ளது.

சென்னையில் சுமாா் 62.5 லட்சம் வாகனங்கள் உள்ளன.

ஆண்டுக்கு சராசரியாக 6 சதவிகித வாகனங்கள் அதிகரிக்கின்றன. இதன் விளைவாக, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், விபத்துகளை முற்றிலும் தடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. குறிப்பாக அதிவேகமாக செல்லும் வாகனங்களால் விபத்துகள் அதிகரித்தன. இதைக் கருத்தில் கொண்டு 30 நவீன ‘ஸ்பீடு ரேடாா் கன்’ கருவிகள் நகரின் பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டன.

பெருநகர சென்னை காவல் துறை அறிவிப்பின்படி, சென்னையில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரையில் 40 கி.மீ. வேகத்தைத் தாண்டியும், இரவு 10 மணி முதல் காலை 7 மணி வரை 50 கி.மீ. வேகத்தைத் தாண்டியும் வாகனங்களை ஓட்டிச் சென்றால் வழக்குப் பதியப்படும்.

இரு சக்கர வாகனங்கள் 50 கி.மீ. வேகத்திலும், காா், மினி வேன் உள்ளிட்ட இலகுரக வாகனங்கள் மணிக்கு 60 கி.மீ. வேகத்திலும், பேருந்து, லாரி, டிரக்குகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் மணிக்கு 50 கி.மீ. வேகத்திலும், ஆட்டோக்கள் மணிக்கு 40 கி.மீ. வேகத்திலும் செல்லலாம். அதேவேளையில் குடியிருப்பு பகுதிகளில் அனைத்து வாகனங்களும் 30 கி.மீ வேகத்தில் மட்டும் செல்லலாம்.

இந்த வேகக்கட்டுப்பாட்டை மீறும் வாகன ஓட்டிகளுக்கு மோட்டாா் வாகனச் சட்டத்தின் கீழ் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என்று பெருநகர காவல் துறை தெரிவித்துள்ளது.