சூடானில் உயிரியல் ஆய்வகத்தைக் கைப்பற்றிய போராளிகள் … எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு ..!

ராணுவம், துணை ராணுவத்துக்கிடையிலான அதிகார மோதலுக்கிடையில் சிக்கித்தவிக்கும் சூடானில் நாளுக்கு நாள் மோதல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் இந்த அதிகார யுத்தத்தில் பலியாகியிருக்கின்றனர். மேலும், 4,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கின்றனர். இந்த நிலையில், தாக்குதல்காரர்களில் ஒரு தரப்பினர் உயிரியல் ஆய்வகத்தை ஆக்கிரமித்திருப்பதால், ஆய்வகத்திலிருந்து நுண்ணுயிரிகள் வெளியேறி மிகப்பெரும் உயிரியல் ஆபத்தை விளைவிக்கலாம் என உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரித்திருக்கிறது.

இது குறித்துப் பேசிய சூடானிலுள்ள உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி நிமா சயீத் அபிட், “மத்திய பொது சுகாதார ஆய்வகம் முற்றிலும் தற்போது சண்டையிட்டுக்கொண்டிருக்கும் ராணுவங்களின் ஒரு தரப்பின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அவர்கள், ஆய்வகத்திலுள்ள அனைத்துத் தொழில்நுட்ப வல்லுநர்களையும் வெளியேற்றிவிட்டனர்.

இந்த ஆய்வகத்தில் தட்டம்மை, போலியோ, காலரா உள்ளிட்ட நோய்களின் உயிரியல் மாதிரிகள் இருக்கின்றன. எனவே இந்த ஆக்கிரமிப்பால் மிகப்பெரிய உயிரியல் ஆபத்து ஏற்படலாம். அதோடு ரத்தப் பைகளின் இருப்பு குறைந்துவரும் சூழலில் மின்சாரம் இல்லாததால் அவை கெட்டுப்போகும் அபாயம் இருக்கிறது. மேலும் ஜெனெரேட்டர்கள் செயல்பாட்டில் இல்லாததால் உயிரி-அபாய (Bio-Risk) ஆபத்து மிக அதிக அளவில் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது” என்று தெரிவித்தார்.

இதற்கிடையில் சூடான் மோதல் குறித்துப் பேசியிருந்த சூடானுக்கான ஐ.நா தூதர் வோல்கர் பெர்தஸ், “அமெரிக்காவின் தலையீட்டால் 72 மணி நேர போர் நிறுத்தத்துக்கு இரு தரப்பும் சம்மதித்தாலும்கூட, ஆங்காங்கே மோதல்கள் நடக்கின்றன. சூடானில் அமைதி திரும்புவதற்கான அறிகுறியே இல்லை” எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.