பரிகார பூஜை செய்வதாக கூறி பெண் பாலியல் பலாத்காரம் – பூசாரிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை..!

கோவை பீளமேடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் 37 வயது பெண். அந்த பெண்ணின் இரு சகோதரர்களும் மன நலம் பாதிக்கப்பட்டவர்கள். இதனால் அந்த பெண் 8 – ம் வகுப்புடன் படிப்பை நிறுத்தி விட்டு சகோதரர்கள் இருவரையும் கவனித்து வந்தார். அந்த பெண்ணின் தந்தையின் நண்பர், அவர்களிடம் மனநல பாதிப்புக்கு பரிகார பூஜை செய்தால் சரியாகிவிடும் என்று தெரிவித்தார். மேலும் தனக்கு தெரிந்த உடுமலை பேட்டையை சேர்ந்த பாபு (வயது 40) என்பவர் பரிகார பூஜை செய்து வருவதாகவும் தெரிவித்து உள்ளார். இதையடுத்து கடந்த 12.3.2021 அன்று பாபு அந்த பெண்ணின் வீட்டில் இரவு நேரத்தில் பரிகார பூஜை செய்து உள்ளார். அப்போது அவர்களிடம் சம்பந்தப்பட்ட பெண் தவிர வேறு யாரும் வீட்டில் இருக்கக் கூடாது என்று கூறினார்.பாபுவின் பேச்சை கேட்ட அந்த பெண்ணின் பெற்றோர்கள் பூஜை நடைபெறும் அறையை விட்டு வெளியேறினர். பின்னர் அந்த பெண்ணை மட்டும் வைத்து பூஜையை தொடர்ந்து பாபு நடத்தினர். பின்னர் தனிமையில் இருந்த அந்த பெண்ணிடம் தன்னுடன் உறவு வைத்து கொண்டால் தான் தோஷம் எல்லாம் போகும் என்று கூறி அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார். இதன் பின்னர் அந்த பெண்ணின் நடவடிக்கையில் ஏற்பட்ட மாற்றத்தை கண்டு பெற்றோர் அவரிடம் விசாரித்தனர்.  பரிகார பூஜையின் போது பாபு தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்து உள்ளார். இதனை தொடர்ந்து அந்த பெண்ணின் பெற்றோர் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பின்னர் இந்த புகார் கோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து போலீசார் பாபுவை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்க கோவை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி நந்தினி தேவி, பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த பாபுவிற்கு 10 ஆண்டு சிறையும், ரூ.500 அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.