பொள்ளாச்சி வனப்பகுதியில் இறந்து கிடந்த சிறுத்தை புலி, குட்டியானை..

பொள்ளாச்சி வனச்சரகம் சேத்துமடை மேற்கு பிரிவு போத்தமடை, அய்யப்பன் கோவில் சரக பகுதியில் வனத்துறையினர் வேட்டை தடுப்பு காவலர்கள் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர் . அப்போது அங்கு சிறுத்தை புலி ஒன்று இறந்து கிடந்தது தெரிய வந்தது. இது குறித்து ஆனைமலை புலிகள் காப்பக இயக்குனர் ராமசுப்பிரமணியம், துணை இயக்குனர் பார்க்கவ தேஜா ஆகியோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது . இதையடுத்து அட்டகட்டி உதவி வன பாதுகாவலர் செல்வம், வனசரகர் புகழேந்தி ஆகியோர் முன்னிலையில் வன கால்நடை உதவி டாக்டர் .விஜயராகவன் டாக்டர் கோவிந்தராஜன் ஆகியோர் இறந்த சிறுத்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். அதன் பிறகு சிறுத்தையின் உடல் தீயிட்டு எரிக்கப்பட்டது.

இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:- இறந்த ஆண் சிறுத்தைக்கு 7 வயது இருக்கும். வேறுவனவிலங்குகளுடன் சண்டை போடும் போது இறந்திருக்கலாம் என்று கூறினார்கள். இதே போல மேட்டுப்பாளையம் வனச்சரகம், கல்லாறு ரயில்வே பாதை அருகே நேற்று மாலை 5 மணி அளவில் வனவர் முனியாண்டி மற்றும் வனப் பணியாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ரெயில்வே பாதையில் இருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் கல்லாறு ஆற்றுப் படுகையில் குட்டி யானை ஒன்று இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து வன துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.