கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: விசாரணை ஏப்.23க்கு ஒத்திவைப்பு.!!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை ஏப்ரல் 23ம் தேதிக்கு ஒத்தி வைத்து உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா ஆகியோருக்குச் சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்தது. கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக மனோஜ், சையான், தீபு உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இதுதொடர்பான வழக்கு நீலகிரி மாவட்டம் உதகை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையின்போது அரசு தரப்பில் கால அவகசம் கோரப்பட்டது. அதாவது, இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 202 பேரிடம் தனிப்பட்ட விசாரணை நடத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அத்துடன் வழக்கு குறித்து பல்வேறு ஆதாரங்களை திரட்டியுள்ளதாகவும், கூடுதல் சாட்சியங்களிடம் விசாரணை நடத்த கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் கேட்கப்பட்டது. அரசுத் தரப்பு கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி சஞ்சய் பாபா , கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை ஏப்ரல் 23ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.