மக்கள் தஞ்சமடைந்த திரையரங்கம் மீது ரஷ்யா கோர தாக்குதல்… 300 பேர் உயிரிழந்த பரிதாபம்.!!

உக்ரைனில் பொதுமக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தஞ்சம் அடைந்த திரையரங்கம் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தியதில் 300 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 4-வது வாரமாக நீடித்து வருகிறது. பல்வேறு பகுதிகள் மீதும் ஏவுகணைகள் மூலம் ரஷ்யா தாக்கி வருகிறது. கடந்த சில நாட்களாக துறைமுக நகரான மரியுபோலை சுற்றி வளைத்து கடுமையாக தாக்கி வருகிறது. ஹைபர்சோனிக் ஏவுகணை உள்ளிட்ட பயங்கரமாக ஆயுதங்களுடன் தாக்குவதால் அந்நகரம் சீர்குலைந்துள்ளது.

மரியுபோலில் 90 சதவிகித கட்டடங்கள் தாக்குதலில் உருக்குலைந்துள்ளன. அங்கு 3 லட்சம் பேர் மின்சாரம், குடி நீர் மற்றும் உணவு இன்றி சிக்கி தவிப்பதாக கூறப்படுகிறது.

பொதுமக்கள் தஞ்சமடைந்துள்ள பகுதிகளை குறி வைத்து தாக்குவதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது. உயிரைக் காப்பாற்றிக் கொள்ள பொதுமக்கள் மரியுபோல் நகரில் உள்ள திரையரங்கில் தஞ்சம் அடைந்திருந்தனர். அதன் மீது கடந்த வாரம் ரஷ்யா தாக்குதல் நடத்தியிருந்தது.

இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த தாக்குதலில் 300 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

‘நேரில் பார்த்தவர்கள் அளித்த தகவலின்படி, ரஷ்ய போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில், நாடகம் நடைபெறும் தியேட்டரில் தஞ்சம் அடைந்திருந்த சுமார் 300 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிகிறது’ என்று மரியுபோல் நகர நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.