மறுபடியும் வேகம் எடுக்கும் கே.என். ராமஜெயம் கொலை வழக்கு- பல ஆண்டு மர்மம் வெளிவரும்.!!

அமைச்சர் கே.என். நேருவின் சகோதரரும், பிரபல தொழில் அதிபருமான கே.என். ராமஜெயம் கொலை தொடர்பாக விசாரணை தீவிரமாக நடந்து வருவதாக வழக்கை விசாரிக்கும் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

திருச்சி: அமைச்சர் கே.என். நேருவின் சகோதரரும், பிரபல தொழில் அதிபருமான கே.என். ராமஜெயம் கொலை தொடர்பாக விசாரணை நடத்திவரும் சிறப்பு புலனாய்வு குழு(Sit) காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேற்று (மார்ச் 18) செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது ,”குற்றவாளிகளை பிடிக்கவேண்டும் என்ற லட்சியத்துடன், புதிய கோணத்தில் விசாரணையை தொடங்கியுள்ளோம். இதற்காக 45 பேர் கொண்ட 5 தனிப்படைகளை அமைத்துள்ளோம். இதில் காவல் துணைக் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் இடம்பெற்றுள்ளனர். தேவைக்கு ஏற்ப இதில் காவல் அலுவலர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்ற தகவலையும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று இரவே தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றும் ஆய்வாளர்கள் முதல் தலைமைக் காவலர்கள் வரையிலான பட்டியல் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. கிட்டத்தட்ட 40 பேர் அடங்கிய பெயர் பட்டியல் வெளியாகி அவர்களை உடனே விடுவிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு காவல் துறையில் பணியாற்றுபவர்களை அதில் சேர்க்க பிப் 09ஆம் தேதி நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கிறது, மார்ச் 11ஆம் தேதியன்றே அதிகாரிகள் காவலர்கள் யார் யார் என முடிவு செய்துவிட்டதாக அந்த உத்தரவின் மூலம் தெள்ளத்தெளிவாக தெரிகிறது. சரியாக ஒருவாரம் கழித்து அதற்கான ஆணை வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.