ஒரே நாளில் 3 வீடுகளில் நகைகள், வெள்ளிப் பொருட்கள் திருட்டு – கோவையில் துணிகரம்..!

கோவை அருகே உள்ள பிஎன் புதூர், மும்பை நாயக்கர் வீதியை சேர்ந்தவர் குமார் (வயது 59) இவர் நேற்று வீட்டை பூட்டி விட்டு தனது மனைவியுடன் வெளியே சென்றிருந்தார். இரவு 8 மணிக்கு வீடு திரும்பினார் .அப்போது வீட்டின் முன் கதவு திறந்து கிடந்தது .உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 8 பவுன் நகைகள் பணம் ரூ 1 லட்சம் ஆகியவற்றை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து குமார் ஆர். எஸ் .புரம் போலீசில் புகார் செய்தார்.

இதேபோல போத்தனூர், ஜோதி நகர் முதல் வீதியைச் சேர்ந்தவர் வெங்கட ரமணி (வயது 46)அதே பகுதியில் இவரது தாயாருக்கு சொந்தமான வீடு உள்ளது. அவரது தாயார் அமெரிக்காவுக்கு சென்றிருந்தார். இதனால் அவரது வீட்டை வெங்கட ரமணி கவனித்து வந்தார்.இந்த நிலையில் தாயாரின் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம ஆசாமிகள் உள்ளே புகுந்து அங்கிருந்த வெள்ளி டம்ளர், வெள்ளி காசு ஆகியவற்றை திருடி சென்று விட்டனர். இது குறித்து வெங்கடரமணி போத்தனூர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவை கணபதி எப்.சி.ஐ. ரோட்டில் உள்ள பாலு கார்டனை சேர்ந்தவர் பியோ ராபர்ட் ( வயது 31)இவர் குடும்பத்துடன் வீட்டின் முதல் மாடியில் தங்கி உள்ளார் . இவரது தாயார் தரைத்தளத்தில் தங்கி உள்ளார். இவரது வீட்டில் கல்பனா என்ற பெண் வேலை பார்த்து வருகிறார் .இந்த நிலையில் அவர்களது வீட்டில் இருந்த 12 பவுன் நகைகளை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர். இதுகுறித்து பியோ ராபர்ட் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்துள்ளார். சப் இன்ஸ்பெக்டர் மோகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்..