மதுரை மாநகராட்சியின் மேயராக இந்திராணி பதவி ஏற்பு.!!

பண்டைய கால சிறப்புமிக்க மதுரை மாநகராட்சியின் மேயராக இந்திராணி பதவி ஏற்றார். இதில் நிதியமைச்சர் பங்கேற்று சிறப்பித்தார்

மதுரை 1971 -ம் ஆண்டு மாநகராட்சி அந்தஸ்துக்கு உயர்ந்தது. அப்போது நகர சபை தலைவராக இருந்த மதுரை முத்து முதல் மேயரானார். அதன் பிறகு 1978 -ம் ஆண்டில் மாநகராட்சி தேர்தல் நடந்தது. அப்போது மாநகராட்சி பதவி காலம் 6 ஆண்டுகளாக இருந்தது. 2 ஆண்டுக்கு ஒருவர் வீதம் 3 மேயர்கள், 3 துணை மேயர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதன் படி 1978 -ம் ஆண்டில் முத்து, 1980 -ம் ஆண்டில் எஸ் கே பாலகிருஷ்ணன் , 1982 -ம் ஆண்டில் பட்டுராஜன் மேயராக இருந்தனர். இதன் பிறகு மேயர் பதவி காலம் 5 ஆண்டுகள் ஆக்கப்பட்டு . மேயரை மக்கள் நேரடியாக தேர்வு செய்தனர். அதில் 1996 -ம் ஆண்டில் குழந்தைவேலு,2001ம் ஆண்டில் செ ராமச்சந்திரன் 2006 -ம் ஆண்டில் மேயரை கவுன்சிலர்கள் தேர்வு செய்தனர். இதில் தேன்மொழி மேயரானார். அதன் பின்னர் 2011ஆம் ஆண்டு ராஜன் செல்லப்பா மேயராக இருந்தார். தற்போது மதுரை மாநகராட்சியின் மேயராக திமுகவைச் சேர்ந்த இந்திராணி பதவியேற்றுள்ளார்.

மதுரை மாநகராட்சி மாமன்றத்தில் உள்ள பெரியார் கூட்டரங்கில் நடைபெற்ற பதவியேற்பு விழாவுக்கு ஆணையர் மரு.கார்த்திகேயன் தலைமை வகித்தார். பகல் 12 மணியளவில் இந்திராணி உறுதிமொழியேற்றார். பின்னர், அவருக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்து, மேயருக்கான வெள்ளிச் செங்கோலை ஆணையர் வழங்கினார். முன்னதாக, மேயர் அணியும் கருப்பு அங்கியும், தங்கச் சங்கிலியும் அணிந்து வருகை தந்த இந்திராணிக்கு, நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் திமுக மாமன்ற உறுப்பினர்கள் வரவேற்பு அளித்தனர்.

இவ்விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் .சு.வெங்கடேசன், சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், துணை ஆணையாளர் சங்கீதா, மக்கள் தொடர்பு அலுவலர்கள் சாலிதளபதி, மகேஸ்வரன், உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கயிலைச்செல்வம், மாமன்ற செயலாளர் (பொ) .பாலசுப்பிரமணியன், உதவி ஆணையாளர்கள், சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள், காவல் துறையினர், பத்திரிகையாளர்கள், உட்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.