கோவை: சிங்காநல்லூர் தமிழ்நாடு ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் உசேன் (வயது 37). காய்கறி வியாபாரி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன், மகள் உள்ளனர். உசேன் வழக்கமாக எம்.ஜி.ஆர் மார்க்கெட்டில் காய்கறிகளை வாங்கி விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் உசேன் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மொத்த வியாபாரி ஒருவரிடம் ரூ. 6.40 லட்சம் மதிப்பிலான 12 லோடு காய்கறிகளை வாங்கி உள்ளார். ஆனால் அதற்குரிய பணத்தை அவர் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனால் கர்நாடகவை சேர்ந்த காய்கறி வியாபாரிக்கும், உசேனுக்கும் இடையே நீண்ட நாட்களாக தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு எம்.ஜி.ஆர் மார்க்கெட்டுக்கு காய்கறி வாங்க சென்ற உசேனை அங்கு வந்த கும்பல் காரில் கடத்தி சென்றனர். இது குறித்து சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில் அவர்கள் உசேனை காரில் கர்நாடக மாநிலத்திற்கு கடத்தி சென்றிருக்கலாம் என தெரிகிறது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காய்கறி மார்க்கெட்டில் வியாபாரி கடத்தப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply