வீடு புகுந்து தம்பதியை தாக்கிய 2 இளைஞர்கள்: கோவையில் கைது

வீடு புகுந்து தம்பதியை தாக்கிய 2 இளைஞர்கள்: கோவையில் கைது

கோவை, செல்வபுரம் அருகே கீரைத் தோட்டம், பாலாஜி அவென்யூ பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவர் தனது மனைவி கலா உடன் அப்பகுதியில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், இவரது வீட்டுக்கு வந்த இரண்டு இளைஞர்கள், ராஜா மற்றும் கலா இருவரையும் சரமாரியாக தாக்கிவிட்டு, கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பித்துச் சென்றனர். இதுகுறித்து செல்வபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, மர்ம நபர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில், கோவையை சேர்ந்த குணசேகரன், தினேஷ் இருவரையும் கைது செய்தனர். விசாரணையில், குணசேகரனின் சகோதரர் கார்த்திக் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததை ராஜா மற்றும் கலா இருவரும் காவல் துறைக்கு தகவல் கொடுத்ததாகவும், அந்த முன் விரோதத்தில் தம்பதியை தாக்கியதாகவும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.