சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் – பெண் சிறுமி என்பதால் காப்பகத்தில் ஒப்படைப்பு..!

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் 23 வயது வாலிபர். இவர் கோவை ஒண்டிப்புதூரில் தங்கி அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் விருதுநகரில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. ஒருவருக்கு ஒருவரை கடந்த 4 வருடங்களாக தீவிரமாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் இவர்களது காதல் விவகாரம் பெண்ணின் வீட்டிற்கு தெரியவந்தது. இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெண் வீட்டார் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. கல்லூரி மாணவி படிப்பை முடித்தவுடன் அவரது வீட்டார் திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர். இதனால் பயந்து போன கல்லூரி மாணவி விருதுநகரில் இருந்து யாருக்கும் தெரியாமல் தனது காதலனை தேடி கோவை வந்தார். இங்கு வந்ததும் கல்லூரி மாணவி மற்றும் அந்த வாலிபர் கோவை சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். இதுகுறித்து சிறுமியின் பெற்றோருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். ஆனால் சிறுமியின் பெற்றோர் புகார் தெரிவிக்க மறுத்து விட்டனர். மேலும் போலீஸ் விசாரணையில் கல்லூரி மாணவிக்கு 18 வயதாக இன்னும் ஒன்றே மாதங்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கல்லூரி மாணவியை காப்பகத்தில் சேர்த்தனர். வாலிபருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.