கேரளாவில் 2 நாட்களாக புதிதாக யாருக்கும் நிபா தொற்று இல்லை – சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் அறிக்கை.!!

கோழிக்கோடு, கேரள மாநிலத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் ஆட்கொல்லியான ‘நிபா வைரஸ்’ பரவல் மீண்டும் திடீரென ஏற்பட்டது. நிபா வைரஸ் தாக்குதலுக்கு 2 பேர் பலியான நிலையில், பாதிப்பு எண் ணிக்கை 6 ஆக உயர்ந்தது. நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட மற்றும் பலியானவர்களுடன் தொடர்பில் இருந்தவர் களின் எண்ணிக்கை 1,080 ஆக உயர்ந்துள்ள நிலையில், அதில் நோய் அறிகுறிகள் உடைய பலருக்கு பரிசோதனை செய்யப்பட்டு, பரிசோதனை மாதிரிகள் மகாராஷ்டிரா மாநிலம் புனேவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 2 நாட்களாக புனேவில் இருந்து வந்த 42 பரிசோதனை முடிவுகளில் புதிதாக யாருக்கும் நிபா வைரஸ் தொற்று இல்லை என கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டு வெண்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வரும் 9 வயது சிறுவனின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியுள்ளார். “நிபா தொடர்பான 19 குழுக்களின் செயல்பாடுகள் தொடர்ந்து நடை பெற்று வருகின்றன. தொடர்பு பட்டியல் தயாரிக்கும் பணியும் நடந்து வருகிறது. அவற்றில் பெரும்பாலானவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இன்னும் கண்டுபிடிக்கப்படாதவர்களின் மொபைல் டவர் இருப்பிடம் உள்ளிட்டவை காவல்துறையின் உதவியுடன் கண்டுபிடிக்கப்படும்” என்றும் அமைச்சர் கூறினார். “கோழிக்கோடு மாவட்டத்தில் முகாமிட்டுள்ள மத்திய குழுக்கள் 2018இல் நிபா தொற்று பரவல் நடந்த இடத்தில் விரிவான ஆய்வு மேற்கொள்ளும். சென்னை மற்றும் புனேவில் இருந்து ஐசிஎம்ஆர் மற்றும் என்ஐ வி-இன் குழுக்கள் தற்போது நோய் உறுதி செய்யப்பட்ட பகுதிகளுக்கு சென்று கள ஆய்வுகளை மேற்கொள் வார்கள். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது” என்றும் அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறினார். மாஹே கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை நிபா வைரஸ் பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோழிக்கோடு மாவட்ட கல்வி நிறுவனங்களுக்கு செப்., 24 வரை விடுமுறை அளித்து கேரள அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், கோழிக்கோடு மாவட்டத்தையொட்டி அமைந்துள்ள புதுச்சேரி பிராந்திய பகுதியான மாஹேவிற்கும் செப்., 24 வரை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாஹே பிராந்திய நிர்வாக அதிகாரி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்..